சென்னை வடபழனி பகுதியில் வசித்து வரும் நவீன் (34) என்பவருக்கு சொந்தமான குடும்ப நிலம் தொடர்பாக அதிர்ச்சி தரும் மோசடி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவரது தாத்தா ராஜேந்திரனுக்குச் சொந்தமான, ஆவடி அருகே வெள்ளனூர் ஞானராஜ் நகரில் அமைந்துள்ள 5,469 சதுர அடி நிலம், ஆள் மாறாட்டம் மூலம் வேறு நபர்களின் பெயரில் விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு நிலத்தை விற்பனை செய்ய முயன்ற போது, வில்லங்கச் சான்று (EC) எடுத்துப் பார்த்த நவீனுக்கு, அந்த நிலம் ஏற்கனவே வேறு ஒருவரின் பெயரில் மாற்றப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து விசாரித்ததில், சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த மீரா மொய்தீன் என்பவருக்கு அந்த நிலம் விற்று, பின்னர் நிர்மலா மற்றும் மாரியப்பன் ஆகியோருக்கும் மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், போலி ஆவணங்கள் தயாரித்து, ஆள் மாறாட்டம் செய்து நிலம் மோசடி செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஓசூர் அருகே மதகொண்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சையது இப்ராஹிம் (47) கைது செய்யப்பட்டார். ஏற்கனவே சசிகுமார் மற்றும் மீரா மொய்தீன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.80 லட்சம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீஸ் விசாரணையில் மேலும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகைய மோசடி கும்பல்கள், முதலில் உரிமையாளர் வசிக்காத இடங்கள் அல்லது வயதானவர்களின் பெயரில் இருக்கும் நிலங்களை குறிவைக்கின்றன. பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாத அல்லது வேலி இல்லாத நிலங்கள் இவர்களின் முக்கிய இலக்காகும். பின்னர் அசல் உரிமையாளரின் பெயரில் போலி ஆதார், பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் தயாரிக்கப்படுகின்றன.
அதனைத் தொடர்ந்து, அசல் உரிமையாளரைப் போலவே தோற்றமளிக்கும் ஒருவரை கூலிக்கு வைத்து, பதிவு அலுவலகத்தில் ஆள் மாறாட்டம் செய்து, ‘தான செட்டில்மென்ட்’ போன்ற குறைந்த கட்டண முறையில் பத்திரம் பதிவு செய்து விடுகின்றனர். பின்னர் அந்த ஆவணத்தை அடிப்படையாக கொண்டு மூன்றாவது நபர்களுக்கு நிலத்தை விற்று பணத்தை மோசடி செய்கின்றனர்.
மேலும், உரிமையாளர் வெளிநாட்டில் இருந்தால், போலியான ‘பவர் ஆப் அட்டார்னி’ ஆவணங்கள் தயாரித்து, அதைப் பயன்படுத்தியும் நிலங்களை விற்று மோசடி செய்வது நடைபெறுகிறது. இந்த சம்பவம் பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. உங்கள் நிலம் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆன்லைனில் வில்லங்கச் சான்று சரிபார்ப்பது, பத்திரங்களுடன் ஆதார் இணைப்பை உறுதி செய்வது, பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு SMS அறிவிப்பு சேவையை செயல்படுத்துவது போன்றவை முக்கியம். மேலும், நிலத்தில் உரிமையாளர் பெயர் மற்றும் மொபைல் எண் கொண்ட பலகை வைப்பதும், சிறிய வேலி அமைப்பதும் மோசடிகளைத் தடுக்க உதவும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read more: இந்த தேர்தலில் ரீ-டேக் வருமா..? விஜய் ஆண்டனி சொன்ன நச் பதில்.. ஆடிப்போன திமுக..!



