உத்தரப் பிரதேசத்தின் மிர்சாபூர் பகுதியில் புதன்கிழமை இரவு நடைபெற்ற சாலை விபத்தில் 11 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிராம்த்கஞ்ச் பள்ளத்தாக்கு அருகே உள்ள சரிவான பகுதியில் இரவு சுமார் 8:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
முதற்கட்ட தகவல்களின்படி, சரிவான சாலையில் கீழே இறங்கிக் கொண்டிருந்த வாகனங்களை பின்னால் வந்த லாரி மோதியதாக கூறப்படுகிறது. அந்த லாரியின் பிரேக் செயலிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னாள் சென்ற வாகனங்களை மோதியதில், மற்றொரு லாரியுடன் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில், ஒரு கார் இரண்டு லாரிகளுக்கும் இடையில் சிக்கி முற்றிலும் நசுங்கியது. மேலும், மற்றொரு கார் தீப்பற்றி எரிந்ததால் பலர் உயிரிழந்தனர். தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாகவும், சாலையில் போக்குவரத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட லாரிகளில் ஒன்று பீகார் மற்றும் மற்றொன்று மத்தியப் பிரதேச பதிவு எண்ணைக் கொண்டதாகவும், கார்கள் மிர்சாபூர் மற்றும் சோன்பத்ரா மாவட்டங்களைச் சேர்ந்தவை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த துயர சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நிவாரணத் தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read more: தேர்தலை புறக்கணித்த வேங்கைவயல் மக்கள்..! வெறிச்சோடிய வாக்குப்பதிவு மையம்..!



