விழுப்புரம் கானைக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயதான சுதா. கடந்த சில நாட்களுக்கு முன்பு, விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு அருகே உள்ள அரசு மருத்துவமனையில் இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை மதியம் பிறந்த நிலையில், சுதா இரவில் குழந்தையை தூக்கிக்கொண்டு அங்கிருந்து ரகசியமாக வெளியேறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவமனை ஊழியர்கள், இது குறித்து உடனடியாக விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில், போலீசார் சுதாவின் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது சுதா முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். மேலும், மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை வீட்டிற்கு வரும் வழியிலேயே உயிரிழந்ததாக கூறியுள்ளார். அதுமட்டும் இல்லாமல், குழந்தையின் உடலை குப்பையில் வீசிவிட்டதாக கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
அபோது சுதா, யோகலிங்கம் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும் அதனால் தான் கர்ப்பமடைந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், தான் கர்ப்பமாக இருப்பது தனது கணவருக்கு தெரியக் கூடாது என்பதற்காக அவர் தனது வயிற்றில் “கட்டி” இருப்பதாகக் கூறியுள்ளார். மேலும், பெண் குழந்தை பிறந்ததால், தனது கணவருக்கு உண்மை தெரிந்துவிடும் என்ற பயத்தில் சுதா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து, ஏரி நீரில் அமுக்கிக் கொலை செய்துள்ளனர்.
பின்னர், குழந்தையின் உடல் வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, உடலோடு கற்களைக் கட்டி ஏரிக்குள் தூக்கி வீசியுள்ளார். சுதா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீசார் குறிப்பிட்ட ஏரிப் பகுதிக்குச் சென்று குழந்தையின் சடலத்தை மீட்டனர். இந்தத் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த விழுப்புரம் போலீசார், சுதா மற்றும் அவரது கள்ளக்காதலன் யோகலிங்கம் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பிறந்த சில மணி நேரமே ஆன பிஞ்சு குழந்தையை தாய் கொடூரமாக கொலை செய்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.



