அசாம் மாநிலம் கெண்டுகுரி பகுதியைச் சேர்ந்த நிதுமோனி லாகுரஷம் என்ற பெண் 10 மாத ஆண் குழந்தையுடன் காணாமல் போனதாக கடந்த 19ஆம் தேதி காவல்துறையில் புகார் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 20 ஆம் தேதி சரைடியோ மாவட்டத்திலுள்ள ராஜாபாரி தேயிலைத் தோட்டத்தில் நிதுமோனி உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கொலையை நிகழ்த்தியது ஒரு முதுமை தம்பதி என தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அந்த தம்பதியை சிமாலுக்குரி ரயில் நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.
இமாச்சலப் பிரதேசத்திற்கு ரயில் மூலமாக தப்பி செல்ல முயற்சி செய்த பசந்தா கோகோய் மற்றும் ஹியாமை கோகோய் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களுடைய மகளான பிரசந்தா கோகோய் என்பவரையும் கைது செய்த காவல்துறையினர், அந்த தம்பதி கடத்திச் சென்ற 10 மாத குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை எஸ்பி சுப்புராஜ் யோதி இது நன்றாக திட்டமிடப்பட்ட ஒரு கொலை. வெகு தினங்களாகவே குழந்தையின்றி தவித்து வரும் மகளின் கனவை நிறைவேற்றுவதற்காகவே இந்த தம்பதியினர் இந்த கொலையை செய்திருக்கிறார்கள். இந்த தம்பதியினர் உயிரிழந்த பெண்ணான நிது மோனியை ஒரு வேலை நிமித்தமாக தங்களுடைய வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். பின்பு அவரிடமிருந்து குழந்தையை பறிப்பதற்கு முயற்சித்து இருக்கிறார்கள். ஆனால் அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்ததால் அவர் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி கொலை செய்துவிட்டு குழந்தையை கடத்திச் சென்றுள்ளனர் என்று தெரிவித்திருக்கிறார்.