நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அங்கு சிக்கித் தவித்த இந்தியர்களில் இதுவரை 163 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முந்தைய நாள் வெளியிடப்பட்ட தகவலுடன் ஒப்பிடும்போது, புதிதாக 5 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதனிடையே, சீனாவில் இருந்த 151 இந்தியர்களும் இன்று அங்கிருந்து புறப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தின் சிலிமே பகுதியில் உள்ள நீர்மின் திட்ட சுரங்கங்களில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலிருந்து சென்ற 24 பேர் கொண்ட சிறப்பு சுரங்க மீட்புக் குழு, மிகவும் சிக்கலான சூழ்நிலைக்கு மத்தியில் பணியில் ஈடுபட்டுள்ளது. சுரங்கத்துக்குள் செல்லும் பாதை குறுகலாக இருப்பதுடன், கடினமான நிலப்பரப்பு காரணமாக கனரக மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்துவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், சுரங்கத்தின் தரைப்பகுதி சேறும் சகதியுமாக இருப்பதால் மீட்புப் பணியில் கூடுதல் சவால்கள் ஏற்பட்டுள்ளன.
இத்தகைய சூழலிலும், மாற்று உத்திகள் மற்றும் தற்காலிக மிதவை சாதனங்களைப் பயன்படுத்தி மீட்புக் குழுவினர் சுரங்கத்தின் ஆழமான பகுதிகளுக்குள் முன்னேறியுள்ளனர். சுரங்கத்துக்குள் மேலும் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்பதைக் கண்டறிந்து, அவர்களை மீட்கும் நோக்கில் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மறுபுறம், பேரிடரில் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியிலும் இந்தியா உதவி செய்து வருகிறது. இந்திய தடயவியல் நிபுணர்கள், நேபாள அதிகாரிகளுடன் இணைந்து டிஎன்ஏ மாதிரிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதன் மூலம் சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் பரிசோதனையை விரைவுபடுத்தி, உயிரிழந்தவர்களை விரைவாக அடையாளம் காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்திய தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா வெளியிட்ட தகவலின்படி, இந்திய சுரங்க மீட்புக் குழுவினர் நேபாள ராணுவத்துடன் ஒருங்கிணைந்து தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அதேபோல், 19 பேர் கொண்ட இந்திய தடயவியல் குழு, காத்மாண்டுவில் உள்ள நேபாள காவல்துறையின் மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகம் மற்றும் தேசிய தடயவியல் அறிவியல் ஆய்வக நிபுணர்களுடன் இணைந்து டிஎன்ஏ மாதிரிகளைப் பரிசோதித்து வருகிறது.
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, தேடுதல் மற்றும் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்திய குழுக்களின் இந்த நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
Also Read: நேபாள வெள்ளத்தில் வந்த விசித்திர மீன்கள்… சாப்பிட்டவர்களுக்கு நேர்ந்த கதி!. பீகாரில் பரபரப்பு!



