ஒருபுறம் குழந்தை பாக்கியத்திற்காக பல ஆண்டுகள் காத்திருந்து, லட்சக்கணக்கான ரூபாயை மருத்துவ சிகிச்சைக்காக செலவழிக்கும் தம்பதிகள் ஏராளம். இன்னொரு புறம், வறுமை, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் பெற்ற குழந்தையையே விற்கும் சம்பவங்களும் அவ்வப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு மனதை உலுக்கும் சம்பவமாக, தெலுங்கானாவில் பிறந்து ஒரு மாதம் கூட ஆகாத ஆண் குழந்தையை பெற்றோரே ரூ.1 லட்சத்திற்கு விற்றதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம், தெலுங்குகுடம் கிராமத்தை சேர்ந்தவர் ஆரான் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). கூலித்தொழிலாளரான இவருக்கு இந்து ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும் 1 மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தம்பதியருக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் இருப்பதால், இந்தக் குழந்தையை விற்க முடிவு செய்துள்ளனர்.
அதன் படி, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு இடைத்தரகர் மூலம் ரூ. 1 லட்சத்திற்கு அந்த குழந்தையை விற்றனர். இந்நிலையில், குழந்தைகள் மேம்பாட்டு சேவை அதிகாரிகளுக்கு இது குறித்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அதிகாரிகள் இது குறித்து மகபூப்நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசார் பச்சிளம் குழந்தையை வாங்கிய நபர் மற்றும் ஒரு இடைத்தரகர் மீது கடந்த 17-ம் தேதி அன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் இன்று விசாரணையின் போது, மகபூப்நகர் நகரில் வாங்குபவரின் கைவசம் இருந்து குழந்தையை ஒரு போலீசார் குழு மீட்டு, குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்தனர். குழந்தையை அவர்கள் ‘விற்றதற்கான’ சரியான காரணங்கள் குறித்து போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.



