எகிறிய வெங்காயம் விலை..! மத்திய அரசு எடுத்த அதிரடி ஆக்‌ஷன்..! சென்னைக்கு விரையும் 840 டன்..!!

Onion 2026

நாடு முழுவதும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் வெங்காயத்தின் சில்லறை விலையை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில், மத்திய அரசு தனது அவசரகால கையிருப்பில் இருந்து 840 டன் வெங்காயத்தை உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக மராட்டிய மாநிலத்தின் மன்மாட் ரயில் நிலையத்தில் இருந்து, வெங்காய மூட்டைகளைச் சரக்கு ரயிலில் ஏற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.


பருவமழை தாமதம் மற்றும் குறிப்பிட்ட சில மாநிலங்களில் பெய்த குறைவான மழைப்பொழிவு காரணமாக வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டு, சந்தைகளுக்கு வரத்து குறைந்துள்ளது. இதன் எதிரொலியாகச் சென்னை, டெல்லி, கேரளா, அசாம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.50 முதல் ரூ.65 வரை கிடுகிடுவென உயர்ந்து சாமானிய மக்களைப் பாதித்துள்ளது. இந்த விலைவாசி உயர்வைச் சமாளிக்க, ‘கண்டா எக்ஸ்பிரஸ்’ எனப்படும் பிரத்யேக சரக்கு ரயில்கள் மற்றும் கனரக லாரிகள் மூலம் வெங்காயத்தை முக்கிய நகரங்களுக்கு மத்திய அரசு நேரடியாக விநியோகித்து வருகிறது.

மத்திய அரசின் இந்தத் தொடர் தலையீட்டின் காரணமாக, ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையான மராட்டிய மாநிலம் லாசல்கான் ஏபிஎம்சி-யில் கடந்த நான்கு நாட்களில் வெங்காயத்தின் மொத்த விலை 10 சதவீதம் வரை சரிந்துள்ளது. அங்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4,250 ஆக இருந்த விலை ரூ.3,800 ஆக குறைந்துள்ள நிலையில், தற்போது சென்னைக்கு அனுப்பப்படும் இந்த 840 டன் வெங்காயம் உள்ளூர் சந்தைகளுக்கு வரும்போது சில்லறை விலையும் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : தமிழ்நாடு ஆளுநர் மாற்றம்? முதல்வர் விஜய்க்கு நெருக்கமானவரா? யார் இந்த கிருஷ்ணகுமார் ரெட்டி?

You May Like