கர்நாடகாவில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸின் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்து 4 வயது சிறுமி படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள வணிக வளாகத்தின் முதல் மாடியில் இருந்து 4 வயது சிறுமி தவறி கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
போலீசார் தெரிவித்த தகவலின்படி, சிக்கபள்ளாபூர் தாலுகாவைச் சேர்ந்த கோல்லரடொட்டி கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி மற்றும் மது தம்பதியினர், தங்களது 4 வயது மகளுடன் பிள்ளப்பா காம்ப்ளக்ஸில் ஆடைகள் வாங்கச் சென்றிருந்தனர்.
அப்போது, பெற்றோர் துணிக்கடையில் ஆடைகளைத் தேர்வு செய்வதில் ஈடுபட்டிருந்த நிலையில், சிறுமி முதல் மாடி வழித்தடத்தில் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பாதுகாப்பு கம்பியைப் பிடித்திருந்த சிறுமி திடீரென நிலைதடுமாறி கீழ்தளத்திற்கு விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுமி கீழே விழுந்ததை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை அறிய வணிக வளாகத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பலரும் சிறு குழந்தைகளை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெற்றோர் கண்காணிப்பின்றி விடக்கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர். அதேவேளையில், வணிக வளாகங்களில் அமைக்கப்படும் பாதுகாப்பு தடுப்புகளின் உயரம் மற்றும் வடிவமைப்பு குறித்து கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், சிறுமி விரைவில் குணமடைய வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
Also Read: அடேங்கப்பா! இப்படி ஒரு கூட்டுக் குடும்பத்த நீங்க இது வரைக்கும் பாத்திருக்கவே மாட்டீங்க!



