காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் சிங்காடிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் (40) மற்றும் அவரது மனைவி தேன்மொழி (35) ஆகியோர், வெள்ளகேட் பகுதியில் உள்ள ஒரு மரக்கிடங்கில் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் மரக்கிடங்கின் உரிமையாளரான ஆறுமுகம் என்பவரிடம் ரூ.20,000 கடன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தேன்மொழிக்கு திடீரென கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உறவினர்கள் முயன்றபோது, வாங்கிய கடனை முழுமையாக அடைத்துவிட்டுதான் செல்ல வேண்டும் எனக் கூறி உரிமையாளர் ஆறுமுகம் தடுத்து நிறுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதன் காரணமாக தங்கியிருந்த இடத்திலேயே தேன்மொழிக்கு அவசரப் பிரசவம் நடந்ததில், உரிய மருத்துவ வசதிகள் இன்றி தாயும் பச்சிளம் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக தேன்மொழியின் குடும்பத்தினர் பொன்னேரிக்கரை காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகாரளித்தனர்.
இப்புகாரின் அடிப்படையில் மரக்கிடங்கு உரிமையாளர் ஆறுமுகம் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், கணவர் ஆனந்தன் மற்றும் ஆறுமுகத்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


