காங்கோ மற்றும் உகாண்டா நாடுகளில் எபோலா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் உலகளவில் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு இதை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலை என அறிவித்துள்ளது. கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இது சாதாரண எபோலா வகை அல்ல என்றும், புண்டிபுக்யோ எனப்படும் அரிதான வகை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது உறுதியான சிகிச்சையோ இல்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆரம்பகட்ட தகவலின்படி, குறைந்தது நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நோய் பல வாரங்களுக்கு தெரியாமல் பரவி இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
ஏப்ரல் இறுதியில் காங்கோவின் இடுரி மாகாணத்தில் இந்த பரவல் தொடங்கியதாக கருதப்படுகிறது. ஆரம்பத்தில் உயிரிழந்த ஒரு சுகாதார பணியாளர் மூலம் இறுதிச் சடங்குகளில் ஏற்பட்ட தொடர்பு காரணமாக வைரஸ் பரவியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மே 17 அன்று உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், நோய் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எபோலா வைரஸ் நேரடி உடல் திரவ தொடர்பின் மூலம் பரவுவதால் மிக ஆபத்தானதாக கருதப்படுகிறது.
ஆரம்பத்தில் காய்ச்சல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தோன்றினாலும், பின்னர் உள் இரத்தப்போக்கு மற்றும் உறுப்புகள் செயலிழப்பு ஏற்படக்கூடும். தற்போதைய நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வருமா அல்லது பெரிய சுகாதார பேரழிவாக மாறுமா என்பது அடுத்த சில வாரங்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகளில் தான் உள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.



