உஸ்பெகிஸ்தானில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் உயரிய தேசிய விருதான ‘ஓலே தாராஜாலி தோஸ்ட்லிக்’ (Oliy Darajali Do’stlik) வழங்கப்பட்டுள்ளது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகால அடிப்படையில் யுரேனியம் சப்ளை மற்றும் 5 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு உட்பட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ், பிரதமர் மோடிக்கு இந்த உயரிய விருதை வழங்கினார். இது பிரதமர் மோடி பெறும் 36-வது சர்வதேச விருதாகும். ‘தோஸ்ட்லிக்’ என்ற வார்த்தைக்கு உஸ்பெகிஸ்தான் மொழியில் ‘நட்பு’ என்று பொருள். இது இந்தியர்கள் அன்றாடம் பயன்படுத்தும் ‘தோஸ்த்’ என்ற வார்த்தையுடன் தொடர்புடையது எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்த விருதை 140 கோடி இந்தியர்களுக்கும் இரு நாடுகளின் பல நூற்றாண்டு கால நட்பிற்கும் அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையேயான இருதரப்பு உறவு தற்போது விரிவான மூலோபாய கூட்டாண்மையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்தவகையில், தற்போது 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ள இருதரப்பு வர்த்தகத்தை, 2030-ஆம் ஆண்டிற்குள் 5 பில்லியன் டாலர்களாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக இரு நாட்டு நிறுவனங்களும் பங்கேற்கும் வர்த்தக உச்சிமாநாட்டை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவின் சிவில் அணுசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய, உஸ்பெகிஸ்தானில் இருந்து நீண்ட கால அடிப்படையில் யுரேனியம் பெறுவதற்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. UPI, செயற்கை நுண்ணறிவு, விண்வெளி, பாதுகாப்பு, கனிம வளங்கள், மரபுசாரா எரிசக்தி, சுகாதாரம் (ஆயுர்வேதம்) மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் இணைந்து செயல்பட இரு நாடுகளும் சம்மதித்துள்ளன.
உஸ்பெகிஸ்தானில் உள்ள ஃபயாஸ் தேபா (Fayaz Tepa) மற்றும் காரா தேபா (Kara Tepa) ஆகிய பழமையான பௌத்த தளங்களை மீட்டெடுத்துப் பாதுகாக்க இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்துள்ளன. இரு நாடுகளுக்கிடையே நேரடி விமான சேவைகள், சகோதர-நகரங்கள் (Sister-city) உருவாக்கம் மற்றும் உஸ்பெகிஸ்தானில் இந்தியர்களுக்கு 30 நாட்கள் விசா இல்லாப் பயணம் ஆகிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.



