டெல்லி காவல்துறை குற்றப்பிரிவின் மாநிலங்களுக்கு இடையேயான செல் அதிகாரிகள் நடத்திய அதிரடி நடவடிக்கையில், விலை உயர்ந்த போலி மற்றும் சட்டவிரோதமாக புற்றுநோய் மருந்துகளை விற்பனை செய்த மாபெரும் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சுமார் ரூ. 9 கோடி மதிப்புள்ள மருந்துகள் மற்றும் இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி-என்சிஆர், மும்பை, ஐதராபாத், ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களுக்கு இவர்களின் சங்கிலித் தொடர் நெட்வொர்க் நீண்டுள்ளது. குற்றவாளிகளுடன் தொடர்புடைய இடங்களில் இருந்து சுமார் ரூ. 50 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும் Darzalex, Imfinzi, Erbitux, Opdyta, Gazyva, Bavencio, Adcetris மற்றும் Keytruda உள்ளிட்ட விலைமதிப்பற்ற மருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. 588 நிரப்பப்பட்ட புற்றுநோய் மருந்து குப்பிகள், 6 காலியான குப்பிகள், 7 காலி மருந்து பெட்டிகள் மற்றும் 3,021 இதர மருந்து அலகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அங்கீகரிக்கப்படாத ஆதாரங்கள் மூலம் போலி மருந்துகளை வாங்குவது, மருத்துவமனைகளில் புற்றுநோயாளிகளுக்காக வைக்கப்பட்டிருந்த மருந்துகளைத் திருடுவது அல்லது திசை திருப்புவது, மற்றும் அரசு நிறுவனங்கள் மூலம் விநியோகிக்கப்படும் மருந்துகளை கள்ளச்சந்தைக்கு மாற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
முறையான பில்கள் மற்றும் உரிமங்கள் இன்றி மருந்துகள் விற்கப்பட்டுள்ளன. பழைய அட்டைப் பெட்டிகள் மற்றும் காலியான மருந்து குப்பிகளில் மருந்துகள் மீண்டும் பேக்கிங் செய்யப்பட்டன. அசிட்டோன் (Acetone) போன்ற இரசாயனங்களைப் பயன்படுத்தி அவற்றின் பேட்ச் எண்கள் மற்றும் MRP விலைகள் ஆகியவை அழிக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளன.
விசாரணையில் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கடைகளில் பணியாற்றும் சிலரின் தொடர்பும் அம்பலமாகியுள்ளது. ஐதராபாத் மற்றும் ஃபாரிதாபாத்தில் உள்ள மருத்துவமனைகளில் புற்றுநோய் நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட மருந்துகளைத் திருடி விற்ற நர்சிங் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் சிலரும் இந்த நெட்வொர்க்கில் சிக்கியுள்ளனர்.
டெல்லி குற்றப்பிரிவு போலீசார் இந்த வலையமைப்பின் முழு நிதிப் பாதையையும், இதன் பின்னணியில் உள்ள மற்ற முக்கிய புள்ளிகளையும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.



