கனமழை காரணமாக சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்ற சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பை முன்னிட்டு, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதேபோல புதுச்சேரி மாநிலத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.