காவல்துறையில் தலைமை காவலர், எஸ்.எஸ்.ஐ ஆகிய பதவிகளின் பதவி உயர்வுக்கான பணிக்கால வரம்பு குறைக்கப்பட்டுள்ளது. முன்பு, 2ஆம் நிலை காவலர் 10 வருடமும், முதல் நிலை காவலர் 5 வருடமும் பணியாற்றினால் தலைமை காவலராக பதவி உயர்வு பெறுவர். ஆனால், தற்போது, முதல் நிலை காவலர் 3 வருடம் பணிபுரிந்தாலே, தலைமைக் காவலராக பதவி உயர்வு பெறுவார். இதையடுத்து, தலைமை காவலர் 10 வருடம் பணிபுரிந்தால் சிறப்பு சார்பு ஆய்வாளராகவும் பதவி உயர்வு வழங்கப்படும். கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து தற்போது அரசாணையாக வெளியிடப்பட்டு இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் காவலர்களுக்கு ஒரு முக்கிய நற்செய்தியாக, அவர்களின் பதவி உயர்வுக்கான கால வரம்பு திருத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் காவல்துறை மானியக் கோரிக்கையின் அறிவிப்பின்படி, காவலர்களுக்கான நிலை உயர்த்துதல் (Upgradation) காலம் 10+5+10 ஆண்டுகள் என்பது தற்போது 10+3+10 ஆண்டுகளாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய திருத்தப்பட்ட கொள்கை முடிவின்படி, காவலர்களின் பதவி உயர்வுக் காலம். அதாவது, 10 ஆண்டுகள் பணிபுரிந்த இரண்டாம் நிலைக் காவலர்கள், முதல்நிலைக் காவலர்களாக தரம் உயர்த்தப்படுவர். முதல்நிலைக் காவலராக 3 ஆண்டுகள் (ஆக மொத்தம் 13 ஆண்டுகள்) பணிபுரிந்த பின்னர், அவர்கள் தலைமைக் காவலர்களாக தரம் உயர்த்தப்படுவர். தலைமைக் காவலராக 10 ஆண்டுகள் (ஆக மொத்தம் 23 ஆண்டுகள்) பணிபுரிந்த பின்னர், அவர்கள் சிறப்பு சார்பு ஆய்வாளராக தரம் உயர்த்தப்படுவர். இந்த அரசாணை வெளியிடப்பட்ட ஜூன் 12, 2025 அன்று முதல் இந்த திருத்திய கொள்கை முடிவு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More: பள்ளி & கல்லூரி மாணவர்கள் அரசு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்…! சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!