கர்நாடகாவில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொடர்பான தனிப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அதன் பின்னணியில் சிறைக்குள் நடந்ததாகக் கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளும் தற்போது வெளியாகியுள்ளன. சிறையில் இருந்த ரவுடியுடன் அந்த பெண் இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு இருந்ததாகவும், இருவரது தொடர்பு தொடர்பான வீடியோ பதிவு தற்போது வெளியானதாகவும் போலீஸ் விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவில், பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் செல்போனில் வீடியோ அழைப்பில் பேசிக்கொண்டிருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வீடியோ பரவியதும், அதில் இருப்பது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் கர்நாடக மாநில தொழில்துறை பாதுகாப்புப் படையில் பணியாற்றும் பெண் இன்ஸ்பெக்டர் என்பது அடையாளம் காணப்பட்டது.
இந்த விவகாரத்தில் முக்கிய திருப்பமாக, அந்த பெண் இன்ஸ்பெக்டர் பணியாற்றிய ஹிண்டல்கா மத்திய சிறையில் அப்போது அடைக்கப்பட்டிருந்த சாய்குமார் என்ற ரவுடியுடன் அவருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. துமகூரு மாவட்டம் குனிகல் பகுதியைச் சேர்ந்த சாய்குமார் ரவுடி பட்டியலில் இடம்பெற்றிருந்தவர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2024-ம் ஆண்டு பெண் இன்ஸ்பெக்டர் ஹிண்டல்கா சிறையில் பணியாற்றியபோது, சாய்குமாருடன் செல்போன் மூலம் வீடியோ அழைப்பில் பேசியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த நேரத்தில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வீடியோவே தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவை சாய்குமார் பதிவு செய்து வைத்திருந்ததாகவும், சமீபத்தில் அது வெளியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பெண் இன்ஸ்பெக்டர் கப்பன் பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சாய்குமார் உள்ளிட்ட சிலர் மீது அவர் புகார் தெரிவித்துள்ள நிலையில், தற்போது விடுப்பில் சென்றுள்ளார். புகாரின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து போலீசார் சட்ட ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு மாறாக, சாய்குமாரும் பெண் இன்ஸ்பெக்டர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து புகார் அளித்துள்ளார். சிறையில் இருந்தபோது தன்னிடம் பணம் பெற்றுக்கொண்டு செல்போன், மதுபானம் மற்றும் சில ஆடம்பரப் பொருட்களை அவர் வழங்கியதாக சாய்குமார் குற்றம் சாட்டியுள்ளார். இதற்காக பயன்படுத்தப்பட்ட அதே செல்போனில் வீடியோ அழைப்புகள் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சிறைக்குள் நடைபெறும் முறைகேடுகளை வெளிப்படுத்த முயற்சிப்பவர்களை பொய் வழக்குகளில் சிக்க வைப்பதாக மிரட்டப்பட்டதாகவும் சாய்குமார் தனது புகாரில் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பெண் இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில், சிறை அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து சமூக வலைதளத்தில் வெளியான மற்றொரு வீடியோ தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வீடியோ தொடர்பாக சிறை அதிகாரிகள் பெலகாவி சிஇஎன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஒரு தனிப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான விவகாரம், சிறைக்குள் செல்போன் மற்றும் பிற பொருட்கள் சென்றதாக எழுந்த குற்றச்சாட்டு, சிறை அதிகாரிகள் மீதான ஊழல் புகார் என அடுத்தடுத்து பல்வேறு கோணங்களில் இந்த விவகாரம் தற்போது விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளது.
Also Read: அதிர்ச்சி!!! பெண்ணை துண்டு துண்டாக வெட்டி, மைதா மாவு, காய்கறிகள் சேர்த்து சமைக்க முயன்ற ஜோடி!



