மாதவிடாய் நாட்களில் வயிற்றுவலி, முதுகுவலி, இடுப்பு பகுதியில் அசௌகரியம் போன்றவை பல பெண்களுக்கு ஏற்படலாம். ஆனால் ஒவ்வொரு மாதமும் தாங்க முடியாத அளவுக்கு வலி ஏற்பட்டு, வழக்கமான வேலைகள், படிப்பு, அலுவலகப் பணிகள் அல்லது தூக்கம் பாதிக்கப்படும் அளவுக்கு நிலைமை இருந்தால், அதை சாதாரண மாதவிடாய் வலி என அலட்சியப்படுத்தக் கூடாது. இதுபோன்ற தீவிரமான வலி சில நேரங்களில் எண்டோமெட்ரியோசிஸ் போன்ற உடல்நலப் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.
எண்டோமெட்ரியோசிஸ் என்பது கருப்பையின் உட்புறப் படலத்தை ஒத்த திசுக்கள் கருப்பைக்கு வெளியே வளரக்கூடிய ஒரு நிலையாகும். இந்தத் திசுக்கள் இடுப்பு பகுதியில் உள்ள பல்வேறு உறுப்புகளைச் சுற்றி வளரும்போது வீக்கம், வலி மற்றும் பிற பாதிப்புகள் ஏற்படலாம்.
மாதவிடாய் காலத்தில் வழக்கத்தைவிட அதிகமாகவும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும் வலி இந்த நிலையின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாக இருக்கலாம். சிலருக்கு மாதவிடாய் தொடங்குவதற்கு முன்பே வலி ஆரம்பித்து, மாதவிடாய் முடிந்த பிறகும் சில நாட்கள் நீடிக்கலாம்.
அனைவருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருக்க வேண்டிய அவசியமில்லை. சில பெண்களுக்கு தொடர்ந்து இடுப்பு பகுதியில் வலி இருக்கலாம். சிலருக்கு உடலுறவின்போது வலி, மலம் கழிக்கும்போது அல்லது சிறுநீர் கழிக்கும்போது வலி போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். சிலருக்கு கர்ப்பம் தரிப்பதில் சிரமமும் இருக்கலாம்.
குறிப்பாக, மாதந்தோறும் ஏற்படும் வலி படிப்படியாக அதிகரிப்பது, வழக்கமான வலி நிவாரணிகளால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருப்பது அல்லது அன்றாட செயல்பாடுகளை முற்றிலும் பாதிப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.
எண்டோமெட்ரியோசிஸை கண்டறிவதற்கு மருத்துவர் முதலில் அறிகுறிகளின் தன்மை, வலி ஏற்படும் காலம் மற்றும் அதன் தீவிரம் குறித்து கேட்பார். தேவையான சூழலில் உடல் பரிசோதனை மற்றும் அல்ட்ராசவுண்ட் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்படலாம். சில சந்தர்ப்பங்களில் மேலும் விரிவான பரிசோதனைகளும் தேவைப்படலாம்.
மாதவிடாய் வலி ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரே அளவில் இருக்காது. லேசான வலி பொதுவாக இயல்பானதாக இருக்கலாம். ஆனால் தொடர்ந்து அதிகரிக்கும் வலி, அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் வலி அல்லது வழக்கமான சிகிச்சையால் நிவாரணம் கிடைக்காத வலி இருந்தால் அதற்கான காரணத்தை கண்டறிவது முக்கியம்.
எனவே, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் கடுமையான வலியை தொடர்ந்து சகித்துக்கொள்வதற்குப் பதிலாக, அதன் பின்னணியில் இருக்கும் காரணத்தை மருத்துவர்களின் ஆலோசனையுடன் கண்டறிவது அவசியம்.
Also Read: 22 வயது பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் கொடுமை… 2 ரயில்வே போலீசார் உட்பட 6 பேர் மீது வழக்கு!



