நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள கீரம்பூரில் இருக்கின்ற அரசு உயர்நிலைப்பள்ளியில் 100 க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றன இந்த பள்ளியில் சமூக அறிவியல் பாட ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பன்னீர்செல்வம். இவர் அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளை ஆபாசமாக தன்னுடைய கைபேசியில் புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை எடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பள்ளி மாணவிகள் தங்களுடைய பெற்றோர்களிடம் இது தொடர்பாக தெரிவித்து இருக்கின்றன. இதனை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியை சுற்றி வளைத்து ஆசிரியர் பன்னீர்செல்வத்திற்கு எதிராக கண்டன போராட்டம் நடத்தினர்.
ஊர் மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியதால் பதற்றமான மற்ற ஆசிரியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். இத்தகைய நிலையில், அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை சர்மிளா அங்குள்ள ஒரு அறையில் ஆசிரியர் பன்னீர்செல்வத்தை வைத்து பூட்டிவிட்டு அதன் பிறகு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஆசிரியர் பன்னீர்செல்வம் இருந்த அறையை திறக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த அறையை திறக்க விடாமல் பொதுமக்கள் காவல்துறையினரை முற்றுகையிட்டனர். இதனை தொடர்ந்து, ஆசிரியர் பன்னீர்செல்வத்தின் மீது காவல்துறையினர் சரியான நடவடிக்கை மேற்கொள்வோம் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து, ஆசிரியரை விசாரணைக்கு அழைத்து செல்வதற்கு பொதுமக்கள் அனுமதித்தனர்.
அதன் பிறகு மாணவிகளை ஆபாசமாக படம் மற்றும் வீடியோ போன்றவற்றை எடுத்த ஆசிரியர் பன்னீர்செல்வத்தின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர் பன்னீர்செல்வத்தின் மனைவி வாழவந்தி நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.