ஆந்திராவை சேர்ந்த யூடியூபர் காந்தம் வைஷ்ணவி என்பவருக்கும், சித்தாரி ஹரிபாபு (26) என்பவருக்கும் திருமணம் நடைபெற்று வாழ்ந்து வந்தனர். கடந்த மார்ச் மாதம், 4 மாதக் கர்ப்பிணியாக இருந்த வைஷ்ணவி தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அப்போது, திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து கூடுதல் வரதட்சணை கேட்டுத் தனது மகளை ஹரிபாபு சித்ரவதை செய்து கொலை செய்துவிட்டதாக வைஷ்ணவியின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் ஹரிபாபுவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், கடந்த ஜூலை மாதம் அவர் நீதிமன்ற நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், வியாழக்கிழமை மாலை சுமார் 5 மணியளவில் ஹரிபாபு சாலையோர உணவகம் ஒன்றின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்திறங்கிய 3 முதல் 4 பேர் கொண்ட கும்பலில் இருந்து ஒருவர், தேங்காய் வெட்டும் அரிவாளுடன் ஹரிபாபுவைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார். கண் இமைக்கும் நேரத்தில் ஹரிபாபுவின் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் சரமாரியாக வெட்டிச் சாய்த்துள்ளனர்.
இதில் பலத்த ரத்தக் காயமடைந்த ஹரிபாபு, சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஹரிபாபுவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஹரிபாபு கொலை செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே, வைஷ்ணவியின் சகோதரர் சந்தோஷ் சமூக வலைதளங்களில் வெளியிட்ட செல்பி வீடியோ ஒன்று வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் பேசியுள்ள நபர்:
“எனது தங்கையைக் கொன்றவனை நானே கொலை செய்துவிட்டேன். தங்கை இறந்ததற்கு அரசு மூலம் நீதி கிடைக்கும் என நீண்ட காலம் நம்பிக்கையுடன் காத்திருந்தேன்; ஆனால் எந்த நடவடிக்கையும் நடக்கவில்லை. வேறு வேலைக்காகச் சென்று கொண்டிருந்தபோது எதேச்சையாக எதிரே வந்த ஹரிபாபுவை அடையாளம் கண்டு, பாதுகாப்புக்காக வைத்திருந்த ஆயுதத்தால் தாக்கினேன். நானே போலீசில் சரணடையப் போகிறேன். எனக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளதால் என்னை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற மக்கள் உதவ வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்தத் துணிகரக் கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதல் நடந்த பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், தாக்குதலுக்குப் பயன்படுத்திய கார் மற்றும் ஆயுதங்களைச் சேகரித்து வருகின்றனர். இக்கொலையில் சந்தோஷ் தவிர்த்து காரில் வந்த மற்ற நபர்கள் யார், இது முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட பழிவாங்கும் கொலையா என்பது குறித்தும் வழக்குப் பதிவு செய்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.



