டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமங்கள் வழங்கியது மற்றும் மதுபானங்களை விற்பனைக் கடைகளுக்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து ஒப்பந்தப் புள்ளிகள் வழங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கார்த்திக் என்பவர், தனக்கு ஜாமின் வழங்கக் கோரி இரண்டாவது முறையாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மனுதாரரை ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்திவிட்டனர். அந்த விசாரணையில் அவரிடமிருந்து எந்தவித ஆவணங்களோ அல்லது பொருட்களோ பறிமுதல் செய்யப்படவில்லை. எனவே, அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்,” என்று வாதிட்டார்.
அப்போது மனுதாரர் தரப்பு வாதத்திற்கு குறுக்கிட்ட நீதிபதி வி. லட்சுமிநாராயணன் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினார். “பேரம் பேசி எம்.எல்.ஏ.-வையே விலைக்கு வாங்க முயற்சித்த வழக்கில் மனுதாரர் சிறையில் இருந்து வருகிறார். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இப்படி வாதங்களை முன்வைத்து நீதிமன்றத்தில் அனுதாபம் தேட முயற்சிப்பதா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து, கார்த்திக்கின் ஜாமின் மனு தொடர்பாக விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என காவல்துறை தரப்பில் கோரப்பட்டது. காவல்துறையின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனு தொடர்பாக காவல்துறை உரிய பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Read More : “ஒழுங்கா அவன்கூட உல்லாசமா இரு…” கல்லூரி மாணவியை தனியாக அழைத்துச் சென்று 4 மாணவிகள் செய்த கொடூரம்!



