சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மாந்திரீக பரிகார நிலையம் நடத்தி வந்த போலி சாமியார் ஒருவர், பரிகார பூஜைக்கு வந்த பெண்கள் மற்றும் பள்ளி சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வீடியோ எடுத்து வைத்திருந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரைப் பிடித்து நையப்புடைத்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
வாழப்பாடி அருகேயுள்ள வெள்ளாளகுண்டம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயராஜா (50). இவர் ஆரம்பத்தில் பழைய ஃபிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார். பின்னர் திடீரென ஆன்மிக வேடமிட்டு, அப்பகுதியில் ‘சனீஸ்வர பரிகார நிலையம்’ என்ற பெயரில் மாந்திரீக தொழில் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக நன்கொடை வசூலிக்க அப்பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் விஜயராஜாவின் மாந்திரீக நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது சிறுமியிடம் நைசாகப் பேசி ஆசை வார்த்தை கூறிய விஜயராஜா, அவரது கன்னத்தைக் கிள்ளி பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்த அச்சிறுமி அங்கிருந்து தப்பியோடி வந்துள்ளார்.
தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அச்சிறுமி தனது தோழியிடம் கூறியபோது, “அந்த சாமியார் ஏற்கனவே எனக்கும் இதேபோல் செய்தார்” எனக் கூறி அதிர்ச்சியளித்துள்ளார். இதையடுத்து பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட, ஆத்திரமடைந்த பெற்றோரும் ஊர் இளைஞர்களும் உடனடியாக விஜயராஜாவின் நிலையத்திற்குச் சென்றனர். விவகாரம் வெளியே தெரிந்துவிட்டதை உணர்ந்த விஜயராஜா, நிலையத்தைப் பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
விஜயராஜா தலைமறைவானதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மாந்திரீக நிலையத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு திகில் படங்களை விஞ்சும் வகையில், பள்ளி மாணவிகளின் சீருடைகள் மற்றும் பெண்களின் உடைகள் அலங்கோலமாக ஆங்காங்கே சிதறிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் அங்கிருந்த ஒரு மடிக்கணினியை எடுத்து ஆய்வு செய்தபோது, போலி சாமியார் விஜயராஜா பள்ளி சிறுமிகள் மற்றும் இளம்பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பான 50-க்கும் மேற்பட்ட கொடூர வீடியோ பதிவுகள் இருந்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற கிராம மக்கள், தீவிர தேடுதல் வேட்டை நடத்தி மற்றொரு பகுதியில் பதுங்கியிருந்த விஜயராஜாவை சுற்றிவளைத்துப் பிடித்து சரமாரியாக தர்மஅடி கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாழப்பாடி டி.எஸ்.பி சபரிநாதன் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார், விஜயராஜாவை பொதுமக்களிடமிருந்து மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பரிகார பூஜைக்கு வந்த பெண்களுக்கு மயக்க மருந்து கலந்த பானங்களை வழங்கி, அவர்கள் மயக்கமடைந்த நிலையில் இதுபோன்ற வக்கிர செயல்களில் ஈடுபட்டு, அதை வீடியோவாகப் பதிவு செய்து மிரட்டி வந்தாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிச் சீருடைகளுடன் ஆபாச வீடியோக்கள் சிக்கிய இச்சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



