தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
அதிமுக சார்பில் வெற்றி பெற்ற தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ.-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்ததால், இவ்விரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் ஆளுங்கட்சியான தவெக, பிரதான எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் ஏற்கனவே தங்கள் வேட்பாளர்களை அறிவித்துத் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) ஆகியவை இணைந்து இத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும், மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும் போட்டியிடுவார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதற்கான வேட்பாளர் பட்டியல் வரும் செப்டம்பர் 15 அன்று வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் சூழலில், இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துக் களம் காண்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதுடன், இரு தொகுதிகளிலும் 5 முனைப் போட்டி உறுதியாகியுள்ளது.



