கேரளாவை மட்டுமின்றி இந்தியாவையே பரபரப்புக்குள்ளாக்கிய சுகுமார குரூப் வழக்கில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 42 ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வரும் சுகுமார குரூப், தென்கிழக்கு ஆசிய நாடான புருனேயில் ‘ஜான் மேனன்’ என்ற பெயரில் தொழிலதிபராக வசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், கேரளா க்ரைம் பிராஞ்ச் தற்போது இண்டர்போல் உதவியை நாட திட்டமிட்டுள்ளது.
மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் வசிக்கும் மலையாளிகள் மற்றும் பிற இந்தியர்கள் மூலம் கேரள போலீசாருக்கு கிடைத்த சில தகவல்களே இந்த புதிய விசாரணைக்கு அடிப்படையாக அமைந்துள்ளதாக தெரிகிறது. புருனேயில் தொழிலதிபராக செயல்பட்டு வரும் ஜான் மேனன் என்பவரின் புகைப்படத்தை ஆய்வு செய்தபோது, அவரது முக அமைப்பு மற்றும் உடல்வாகு சுகுமார குரூப்புடன் ஒத்துப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டுமானப் பொருட்கள் விநியோகம் தொடர்பான முறைகேடு வழக்கில் ஜான் மேனனின் கூட்டாளியாக கூறப்படும் பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தச் சம்பவத்தின்போது, ஜான் மேனன் தன்னை மலேசியாவுக்கு குடிபெயர்ந்த கேரளக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
தற்போது சுகுமார குரூப்பின் வயதுக்கு ஏற்ற தோற்றத்தில் இருப்பதாக கூறப்படும் ஜான் மேனனின் புகைப்படம் கேரள போலீசாரிடம் கிடைத்துள்ளது. இதையடுத்து, கேரளா க்ரைம் பிராஞ்ச் ஐ.ஜி. ஷ்யாம் சுந்தர் தலைமையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இண்டர்போலுக்கு விரிவான தகவல்களுடன் அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
ஜான் மேனனும் சுகுமார குரூப்பும் ஒருவரே என்பதை உறுதி செய்ய, புருனே அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கைரேகை, மருத்துவ ஆவணங்கள் உள்ளிட்ட அடையாளத் தகவல்களை ஒப்பிட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதன் மூலம் பல தசாப்தங்களாக நீடித்து வரும் இந்த மர்மத்துக்கு முடிவு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் சுகுமார குரூப் உயிருடன் இல்லை என்ற முடிவுக்கு க்ரைம் பிராஞ்ச் வந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அவருக்கு தற்போது 80 வயதுக்கு மேல் இருக்கக்கூடும் என்பதுடன், இதய நோய் பாதிப்பு இருந்ததாகவும் தகவல்கள் இருந்ததால், வழக்கை முடிவுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து போலீசார் பரிசீலித்ததாக தெரிகிறது.
ஆனால், முன்னாள் புலனாய்வு அதிகாரி அலி அக்பர் இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தினார். சுகுமார குரூப் உயிருடன் இருப்பதற்கான 169 ஆவண ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக அவர் கூறியதைத் தொடர்ந்து, அவரது நிலை குறித்த சந்தேகம் மீண்டும் வலுப்பெற்றது.
சுகுமார குரூப் மீது குற்றச்சாட்டு உருவான சம்பவம் 1984-ம் ஆண்டு நடைபெற்றது. ஜனவரி 22-ம் தேதி கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், தனது பெயரில் இருந்த ரூ.8 லட்சம் ஆயுள் காப்பீட்டுத் தொகையை பெறுவதற்காக தனது மரணத்தை போலியாக உருவாக்க அவர் திட்டமிட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதற்காக தன்னைப் போன்ற உடல்வாகு கொண்ட திரைப்பட விநியோக பிரதிநிதியான சாக்கோ என்பவரை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. சாக்கோவை காரில் அழைத்துச் சென்ற பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது உடலை காருக்குள் வைத்து தீ வைத்து எரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சம்பவத்துக்குப் பிறகு உடல் சுகுமார குரூப்புடையது என நம்ப வைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், தடயவியல் பரிசோதனையில் கிடைத்த முக்கிய தகவல் முழு திட்டத்தையும் மாற்றியது. எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல் சுகுமார குரூப்புடையது அல்ல என்றும், கொலை செய்யப்பட்டது சாக்கோ என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து வழக்கு கொலை மற்றும் காப்பீட்டு மோசடி வழக்காக மாறியது.
இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டபோதிலும், சுகுமார குரூப் மட்டும் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவானார். அதன் பின்னர் அவரை கண்டுபிடிக்க பல்வேறு மாநிலங்களில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கேரளா மட்டுமின்றி வடஇந்திய மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் அவரது தடயத்தை போலீசார் தேடியதாக கூறப்படுகிறது.
சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு ஜார்க்கண்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றபோது, அங்கு பணியாற்றிய ரத்னம் என்ற மலையாளி செவிலியர் சுகுமார குரூப்பை பார்த்ததாக ஒரு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு செல்வதற்குள் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
அதன்பிறகு, சாமியார் வேடம் உள்ளிட்ட பல்வேறு அடையாளங்களில் அவர் சுற்றி வந்ததாகவும், இந்தியாவின் பல பகுதிகளில் மட்டுமின்றி அரபு நாடுகளிலும் அவரை தேடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளும் அவரது தொடர்புடைய வழக்குகளை விசாரித்ததாக கூறப்படுகிறது.
இவ்வளவு ஆண்டுகளாக எந்த உறுதியான தடயமும் கிடைக்காத நிலையில், தற்போது புருனேயில் ‘ஜான் மேனன்’ என்ற பெயரில் சுகுமார குரூப் வசித்து வருவதாக வெளியாகியுள்ள தகவல் வழக்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அடையாளம் உறுதி செய்யப்பட்டால், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்து வரும் இந்தியாவின் முக்கிய குற்றவியல் புதிர்களில் ஒன்றுக்கு தீர்வு கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.



