மகளிர் உரிமைத் தொகை விரைவில் கூடுதல் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளதாகவும், இதற்காக முதல்வர் திட்டமிட்டு வருவதாகவும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
விருதுநகரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி; சிறப்பு முகாம்களில் மகளிர் உரிமைத் தொகை வழங்கக் கோரி 60 சதவிகித மனுக்கள் வருகின்றன. மகளிர் உரிமைத்தொகை விரைவில் கூடுதல் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்காக முதல்வர் திட்டமிட்டு வருகிறார். இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி அடைந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.முதல்வர் உங்களுக்காக இன்னும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்த தயாராக இருக்கிறார். அதற்கு நீங்கள் நம்முடைய திராவிட ஆட்சிக்கு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 2026-லும் தொடர்ந்து உங்களுடைய ஆதரவு கொடுக்க வேண்டும்.
விருதுநகரில் சுமார் ரூ.162 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளை உதவிகளை வழங்குவதில் நான் உண்மையில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். அரசினுடைய வெற்றி உங்கள் ஒவ்வொருவருடைய முகத்தில் தெரிகின்றது. எத்தனையோ மாவட்டங்களுக்கு சென்று எத்தனையோ பேருக்கு பட்டா கொடுத்தாலும் இன்னைக்கு விருதுநகர் மாவட்டத்திற்கு வந்து விருதுநகர் மக்களுக்கு பட்டா கொடுப்பது கூடுதல் சிறப்பு.
நம்முடைய அரசு அமைந்த பிறகு சுமார் 19 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. பட்டா மட்டும் உள்ளவர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் கட்டுவற்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது. மகளிர் குழுக்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கியுள்ளது, இந்தியாவிலேயே ஒரு முன் மாதிரி திட்டம். கட்டணமில்லா பேருந்துகளில் மகளிர் 780 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு இருக்கிறார்கள் என்றார்.