கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய 5,920 விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகை ரூ.97.77 கோடி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில் 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 22 தனியார் என மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இதில் 2024-25 ம் ஆண்டு அரவைப் பருவத்தில் 12 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 16 தனியார் என மொத்தம் 30 சர்க்கரை ஆலைகள் அரவைப் பணி மேற்கொண்டுள்ளன. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் 2024-25 அரவைப் பருவத்தில் கடந்த மே 15-ம் தேதி வரை 18.81 லட்சம் டன் அரவை செய்து, 8.40 சதவீத சர்க்கரை கட்டுமானத்தில் 1.58 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்துள்ளன.
அரவை மேற்கொண்ட 12 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் கள்ளக்குறிச்சி-1, கள்ளக்குறிச்சி-2, சுப்பிரமணிய சிவா, திருப்பத்தூர் ஆகிய 4 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மற்றும் அறிஞர் அண்ணா, பெரம்பலூர் ஆகிய 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் கொள்முதல் செய்து, அரவை செய்த 10.30 லட்சம் டன் கரும்புக்கு வழங்க வேண்டிய ரூ.329.34 கோடியை தங்கள் ஆலையின் சொந்த நிதியிலிருந்து கரும்பு விவசாயிகளுக்கு வழங்கி உள்ளன.
மோகனூர், தர்மபுரி, வேலூர், செங்கல்வராயன், திருத்தணி, எம்.ஆர்.கே., செய்யார், மதுராந்தகம் ஆகிய 8 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் தாங்கள் கொள்முதல் செய்து, அரவை செய்த 8.51 லட்சம் டன் கரும்புக்கு வழங்க வேண்டிய ரூ. 272.87 கோடியில் ரூ.175.10 கோடியை கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு தங்கள் சொந்த நிதியிலிருந்து வழங்கின. இதுபோக ஆலையின் நிதி ஆதாரம் இல்லாத காரணத்தால் நிலுவையாக ரூ.97.77 கோடியை விவசாயிகளுக்கு வழங்காமல் வைத்திருந்தன.
எனவே, கரும்பு விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் விதமாக, தமிழக அரசு 5,920 விவசாயிகள் பயன்பெறும் வகையில் வழிவகைக் கடனாக ரூ.97.77 கோடி ரூபாய் அனுமதித்துள்ளது. இந்த நிதியுதவி கொண்டு விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு சர்க்கரை ஆலைகளால் கரும்பு பணம் நிலுவையின்றி முழுமையாக வழங்கி முடிக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து, நிலுவைத்தொகை பெற்று பயனடைந்த திருவண்ணாமலை, தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல், சேலம், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் நேற்று, தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.