தமிழ்நாடு அரசு வேளாண்மையில், பயிர் உற்பத்தியை அதிகரிக்க, நிலத்தடி நீர் பாசனத்தில் மின்மோட்டார் பம்புசெட்டு அமைக்கும் திட்டம் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் மின்சார பயன்பாட்டுத் திறனை அதிகரித்தல் மற்றும் அதிகமான பாசன நீரினை குறைந்த செலவில் இறைத்தல் ஆகிய நோக்கத்திற்காக செயல்படுத்தி வருகிறது.
நடப்பு 2025-26 ஆம் ஆண்டில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் மின்மோட்டார் பம்புசெட்டு அமைப்பதற்கு புதிய 4 நட்சத்திர தரம் கொண்ட மின் மோட்டார் பம்செட் வாங்கிட ரூ.15,000/- அல்லது மின்மோட்டார் பம்செட்டின் மொத்த விலையில் 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
புதிய 4 நட்சத்திர தரம் கொண்ட மின் மோட்டார் பம்புசெட்டுகளை வாங்கிட விவசாயிகளுக்கு ரூ.15,000/- அல்லது மின் மோட்டார் பம்புசெட்டின் மொத்த விலையில் 50% இவற்றுள் எது குறைவோ அத்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். பழைய பம்பு செட்டுகளுக்கு மாற்றாக புதிய 4 நட்சத்திர தரம் கொண்ட மின்சார மோட்டார் பம்பு செட்டுகளும், புதிதாக உருவாக்கப்பட்ட கிணறுக்கு புதிய 4 நட்சத்திர தரம் கொண்ட மின் மோட்டார் பம்பு செட்டுகளும் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. திறன் குறைந்த பழைய மின்மோட்டார் பம்பு செட்டுகளை மாற்றவும், மின்சாரவாரியத்தின் மூலம் அனுமதிக்கப்பட்ட குதிரைத்திறன் அல்லது அதற்குக் குறைவான குதிரைத்திறன் கொண்ட திறன்மிகு பம்புசெட்டுகள் வாங்கவும் மானியம் வழங்கப்படுகிறது.



