மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் ஆலம்பட்டியில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “கருணாநிதி மகன் என்ற பின்புலத்துடன்தான் ஸ்டாலின் தி.மு.க தலைவரானார். அதைத் தொடர்ந்து தற்போது முதலமைச்சர் ஆகியிருக்கிறார். ஆனால், எடப்பாடியார் அப்படி அல்ல, 50 ஆண்டுக்கால பொதுவாழ்க்கையில் கிளைச் செயலாளராக இருந்து படிப்படியாக உயர்ந்து, கழகப் பொதுச்செயலாளராகி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகி இருக்கிறார். தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் 25 பேர் பலியாகி இருக்கின்றனர். இதனால் தமிழகத்துக்கு மிகப்பெரிய தலைக்குனிவு ஏற்பட்டிருக்கிறது.
500 டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார். ஆனால், மாற்று வழியில் 5,000 கடைகளைத் திறந்துவிடுவார். சமீபத்தில் மேலூரில்கூட டாஸ்மாக்கில் மது குடித்தவர் பலியாகியிருக்கிறார், மற்றோர் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. ஒரு மாணவி தன் தந்தையின் குடியை நிறுத்த கடிதம் எழுதிவைத்து தற்கொலை செய்துகொண்டார். இது போன்ற சம்பவங்களால் தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது.மக்களின் உரிமை குறித்து எடப்பாடியார் குரல் எழுப்பி வருகிறார், இது குறித்துப் பத்திரிகையாளர்கள் கேட்டால் அதற்கு ஸ்டாலின் பதில் சொல்ல மறுக்கிறார்.
அன்று காவிரிப் பிரச்னைக்காக கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 நாள்கள் அவையை முடக்கி வெற்றி பெற்றார்கள். இப்போது மேக்கேதாட்டூ பிரச்னையில் முதலமைச்சரும் வாய் திறக்கவில்லை, நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைதியாக இருக்கின்றனர். எந்தப் பிரச்னைக்கும் முதலமைச்சர் வாய் திறப்பதில்லை, ஆனால், தன் மகனுக்கு அதிகாரத்தை அளிக்க உத்தரவிடவும் சாப்பிடுவதற்கும் மட்டும்தான் வாய் திறக்கிறார்.
அரசுப் போக்குவரத்துத்துறையில் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்த நிலையில் தற்போது 20,000 காலிப் பணியிடங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அது மட்டுமின்றி உதிரிபாகங்கள் பற்றாக்குறையால் சுமார் 2,000 பேருந்துகள் செயல்படாமல் முடங்கியிருக்கின்றன. கட்டணமில்லா பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்துக்கு இயக்கப்படாததால், பணியிடங்களுக்குப் பெண்கள் செல்லமுடியவில்லை. அமைச்சர்கள் புதிய வழித்தடத்தில் பேருந்துகளைத் தொடங்கிவைக்கிறார்கள். புதிய பேருந்துகளை கொள்முதல் செய்யாமல் ஏற்கெனவே இருந்த பழைய வழித்தடத்தை ரத்து செய்துவிட்டு, அதைப் புதிய வழித்தடமாக அறிவிக்கும் நகைச்சுவைக் காட்சி தினம்தோறும் நடந்துகொண்டே இருக்கின்றன.
இப்போதே இவ்வளவு சிரமங்கள் இருக்கின்றன என்றால், பள்ளி, கல்லூரிகள் திறந்துவிட்டால் மிகப்பெரிய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்றார்.