உடல் கட்டு (Bodybuilding) என்றாலே பலருக்கு வலிமை, ஆரோக்கியம், உடற்தகுதி என்பதுதான் நினைவுக்கு வரும். ஆனால், சமீப காலமாக இளம் வயது பாடி பில்டர்கள் திடீரென உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது மருத்துவ நிபுணர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. வெளிப்படையாக உடல் ஆரோக்கியமாக இருந்தாலும், உள்ளுறுப்புகளின் ஆரோக்கியமும் அதே அளவு முக்கியம் என்பதை இந்தச் சம்பவங்கள் மீண்டும் நினைவூட்டுகின்றன.
சமீபத்தில் பிரேசிலைச் சேர்ந்த பிரபல ஃபிட்னஸ் இன்ஃப்ளூயன்சர் ஒருவர், ஜிம்மில் எடுத்த தனது உடற்பயிற்சி புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த சில மணி நேரங்களிலேயே வீட்டில் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவங்கள் இந்தியா, பிரேசில், ஜெர்மனி, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் பதிவாகியுள்ளன. பெரும்பாலான உயிரிழப்புகள் மாரடைப்பு அல்லது திடீர் இதயநிறுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வெளியான தகவல்களின்படி, 2025-ஆம் ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் 56 போட்டி பாடி பில்டர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சராசரி வயது 35 மட்டுமே. இதில் பாதிக்கும் மேற்பட்டோர் இதயம் தொடர்பான பிரச்சினைகளால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த பிரபல பாடி பில்டரும் நடிகருமான வரிந்தர் சிங் குமான் தோள்பட்டை அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட இதயநிறுத்தத்தால் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. அதேபோல், பிரேசிலில் போட்டியில் பங்கேற்ற சில மணி நேரங்களிலேயே இளம் பாடி பில்டர் ஒருவர் உயிரிழந்த சம்பவமும், இந்தியாவில் கடுமையான எடை தூக்கும் பயிற்சிக்குப் பிறகு மார்பு வலி ஏற்பட்டு பவர் லிஃப்டர் ஒருவர் உயிரிழந்த சம்பவமும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின.
சர்வதேச பாடி பில்டிங் மற்றும் ஃபிட்னஸ் கூட்டமைப்பு (IFBB) போட்டிகளில் 2005 முதல் 2020 வரை பங்கேற்ற சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களின் உடல்நிலையை ஆய்வாளர்கள் கண்காணித்தனர். அந்த ஆய்வில் 121 பேர் உயிரிழந்திருந்தனர். அவர்களில் 46 பேர் திடீர் இதயநிறுத்தம் காரணமாக உயிரிழந்தது கண்டறியப்பட்டது. தொழில்முறை பாடி பில்டர்களுக்கு, சாதாரண போட்டியாளர்களைவிட திடீர் இதய மரணம் ஏற்படும் அபாயம் அதிகம் என்றும் ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, செயல்திறனை அதிகரிக்க பயன்படுத்தப்படும் அனபாலிக் ஸ்டீராய்டுகள் (Anabolic Steroids) என மருத்துவர்கள் கூறுகின்றனர். இவை ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதுடன், இதய தசைகளை பாதிக்கவும், ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை அதிகரிக்கவும், மாரடைப்பு, இதய செயலிழப்பு மற்றும் இதய துடிப்பு கோளாறுகளுக்கான அபாயத்தையும் உயர்த்துகின்றன.
அதேபோல், போட்டிகளுக்கு முன் உடல் எடையை வேகமாகக் குறைக்க கடுமையான நீரிழப்பு முறைகளை பின்பற்றுவது, அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி செய்வது, சமநிலையற்ற உணவுமுறை மற்றும் தரமற்ற தசை வளர்ப்பு மருந்துகள் அல்லது ஊசிகளை பயன்படுத்துவதும் உடலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
டென்மார்க்கில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்விலும், அனபாலிக் ஸ்டீராய்டுகளை பயன்படுத்திய ஆண்களுக்கு இதய தசை பாதிப்பு, மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்பு ஏற்படும் அபாயம், அவற்றைப் பயன்படுத்தாதவர்களைவிட பல மடங்கு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
உடல் கட்டு பயிற்சி செய்வது ஆபத்தானது அல்ல என்று மருத்துவர்கள் தெளிவுபடுத்துகின்றனர். சரியான பயிற்சியாளர் வழிகாட்டுதல், சத்தான உணவு, போதுமான ஓய்வு மற்றும் பாதுகாப்பான பயிற்சி முறைகளை பின்பற்றினால் உடல்நலத்தை மேம்படுத்த முடியும். ஆனால், உடலை அளவுக்கு மீறி சிரமப்படுத்துவது, தடை செய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்துவது மற்றும் உடல்நல எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்துவதுதான் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
வெளியில் தெரியும் தசைகள் மட்டும் ஆரோக்கியத்தின் அடையாளம் அல்ல. வலிமையான இதயம், நல்ல உடல்நலம் மற்றும் பாதுகாப்பான வாழ்க்கை முறை ஆகியவையே உண்மையான உடற்தகுதிக்கான அடிப்படை என்பதை இந்தச் சம்பவங்கள் மீண்டும் உணர்த்துகின்றன.
Also Read: ரத்தசோகை பிரச்சினையா?… கீரை, பேரீச்சம்பழம் மட்டும் போதாது… இந்த 5 உணவுகளையும் கட்டாயம் சாப்பிடுங்க!



