தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். மற்ற கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை திமுகவில் இணைக்கும் பணியை செந்தில் பாலாஜிக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். இதே போல அதிமுகவும் தங்களது கட்சியை பலப்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதனிடையே கடந்த மாதம் அதிமுகவில் இருந்து மூன்று புள்ளிகளை தூக்கி சம்பவம் செய்திருக்கிறது திமுக. அதிமுகவின் முக்கிய இஸ்லாமிய முகங்களில் ஒருவரான அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அதனை தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏ கார்த்தி தொண்டைமான், முன்னாள் எம்பி மைத்திரேயன் உள்ளிட்டோர் திமுக கட்சியில் இணைந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்க திமுக முக்கிய நிர்வாகிகளை தன் வசம் இழுக்க அதிமுக மும்மரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது திமுகவிலிருந்து ஏராளமான நிர்வாகிகள் விலகி அதிமுக கட்சியில் இணைந்துள்ளனர். அங்குள்ள முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி தலைமையில், திமுகவின் முன்னாள் சேர்மன் காசி உட்பட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர்.
முக்கியமாக, திருவண்ணாமலை மாவட்டம் திமுக மூத்த அமைச்சர் எ.வ. வேலுவின் கோட்டையாக கருதப்படுகிறது. அத்தகைய இடத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விலகி அதிமுகவுடன் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more: இந்த 4 ராசிகளுக்கு அக்டோபரில் பம்பர் லாட்டரி! மிகப்பெரிய வெற்றி கிடைக்கும், செல்வம் பெருகும்!



