ரூ.21,650-க்கு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் – கொள்முதல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்பட்டு வந்தது. இது கொரோனா காரணத்தினால் இடைநிறுத்தம் செய்யப்பட்டு பின்னர் அப்படியே கைவிடப்பட்டது. இதன் பிறகு 2021-ல் திமுக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் மீண்டும் திட்டம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசு கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி அல்லது கைக்கணினி (டேப்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக 2025 – 2026 தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, “முதற்கட்டமாக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு, அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும்” எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம், 20 மாணவர்களுக்கான மடிக்கணினி அல்லது கைக்கணினி வழங்குவதற்காக தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் சர்வதேச அளவில் டெண்டர் கோரியது.
இந்த நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு மடிக்கணினியை ரூ.21,650-க்கு கொள்முதல் செய்ய உள்ளது. தமிழ்நாடு அரசு முதற்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்கு ஹெச்.பி, டெல், ஏசர் ஆகிய 3 நிறுவனங்களுக்கு பணி ஆணை வழங்கியது எல்காட் நிறுவனம். மார்ச் மாத இறுதிக்குள் மடிக்கணினி விநியோகம் செய்யும் பணியினை முழுமையாக முடிக்க திட்டமிட்டுள்ளது.



