பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் படித்தவர்களுக்கான அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நாளை நடைபெறவுள்ளது.
இது குறித்து பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் 15 வயதுக்கும் மேற்பட்ட முற்றிலும் எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிடும் வகையில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் சேர்ந்துள்ள 5.20 லட்சம் கற்போர்கள் பயனடையும் வகையில் 28, 848 கற்போர் மையங்கள் அமைக்கப்பட்டு, தன்னார்வலர்களின் உதவியுடன் கற்பித்தல் மற்றும் சுற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது மார்ச் 19-ம் தேதி இத்திட்டத்தின் கற்போர் அனைவருக்கும் அவரவர் சார்ந்த கற்போர் மையங்களில் அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்தப்பட்டு அரசின் அடிப்படை எழுத்தறிவுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இந்த அடிப்படை எழுத்தறிவுத் தேர்வில் பதிவு செய்து பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் அருகில் உள்ள புதிய பாரத எழுத்தறிவுத் திட்டக் கற்போர் மையங்கள், வட்டார வளமையம், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.