பழைய பல்லாவரம், ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் மனிஷா (20). இவரது கணவர் தீனு (27). இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தீனு வேலூர் மாவட்டத்தில் தங்கி வேலை செய்து வருகிறார்.
மனிஷா பழைய பல்லாவரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். திருமணமான முதல் வருடத்தில் மனிஷாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஒன்றரை வயதில் உடல்நிலை சரியில்லாமல் குழந்தை உயிரிழந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மனிஷாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. சில நாட்களில் குழந்தையும் நோய்வாய்ப்பட்டு இறந்தது. இதனால் மனமுடைந்த மனிஷா, தினமும் குழந்தைகளை நினைத்து வீட்டில் கதறி அழுதார்.
அவருக்கு உறவினர்கள் வந்து ஆறுதல் கூறினர்.இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த பல்லாவரம் போலீசார், மனிஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் இறந்ததால், தாய் துக்கம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.