இந்திய பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளில் சீராக வளர்ச்சி கண்டிருந்தாலும், அந்த வளர்ச்சி அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக சென்றதாக சொல்ல முடியாது. குறிப்பாக தனிநபர் வருமானத்தைப் பொருத்தவரை, மாநிலங்களுக்கு இடையேயான பெரிய இடைவெளி இன்னும் நீடித்து வருகிறது. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவின் சராசரி தனிநபர் வருமானம் தற்போது சுமார் ரூ.2 லட்சம் அளவில் உள்ளது. ஆனால் பல மாநிலங்கள் இன்னும் இந்த சராசரியை விட குறிப்பிடத்தக்க அளவில் பின்தங்கியுள்ளன.
பீகார்: அந்த வரிசையில் முதலில் குறிப்பிடப்பட வேண்டியது பீகார் மாநிலம். தொடர்ந்து குறைந்த தனிநபர் வருமானம் கொண்ட மாநிலமாக இது காணப்படுகிறது. 2025-26 மதிப்பீட்டின்படி, இங்கு ஒருவரின் சராசரி வருமானம் ரூ.60,000 முதல் ரூ.65,000 வரை மட்டுமே உள்ளது. விவசாயம் மீது அதிகம் சார்ந்திருப்பதும், தொழில்துறை வளர்ச்சி மந்தமாக இருப்பதும் இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசம்: அடுத்து ஜார்கண்ட் மாநிலம் வருகிறது. கனிம வளங்கள் அதிகமாக இருந்தாலும், அதன் பயன் அனைத்து மக்களுக்கும் சமமாக செல்லவில்லை. இதனால் இங்கு தனிநபர் வருமானம் ரூ.85,000 முதல் ரூ.95,000 வரை மட்டுமே உள்ளது. இதற்கு இணையாக உத்தரப் பிரதேசம் மாநிலத்திலும் இதே நிலைதான். நாட்டின் மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்ட மாநிலமாக இருந்தாலும், வருமானம் ரூ.85,000 முதல் ரூ.95,000 வரம்பில் உள்ளது. நகர மற்றும் கிராமப்புற இடைவெளி இங்கு தெளிவாகப் பார்க்கப்படுகிறது.
மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர்: மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் தனிநபர் வருமானம் ரூ.1.2 லட்சம் முதல் ரூ.1.4 லட்சம் வரை உள்ளது. இங்கு வேளாண்மை மற்றும் சுரங்கத் துறைகள் முக்கிய பங்கு வகித்தாலும், அந்த வளர்ச்சி அனைத்து பகுதிகளுக்கும் சமமாக கிடைக்கவில்லை.
வடகிழக்கு மாநிலங்கள்: அஸ்ஸாம், மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகியவற்றிலும் தனிநபர் வருமானம் ரூ.1.2 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரையிலேயே உள்ளது. புவியியல் சவால்கள், போக்குவரத்து இணைப்பு குறைவு மற்றும் குறைந்த தொழில்துறை வளர்ச்சி ஆகியவை முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
ஒடிசா: ஒடிசா மாநிலம் சமீப காலங்களில் முன்னேற்றம் கண்டிருந்தாலும், இன்னும் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.1.7 லட்சம் வரம்பிலேயே உள்ளது. மாவட்டங்களுக்கு இடையேயான வளர்ச்சி வேறுபாடு இங்கும் தெளிவாக தெரிகிறது. அதேபோல் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசத்திலும் தனிநபர் வருமானம் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.1.7 லட்சம் வரை மட்டுமே உள்ளது. பொருளாதார பன்முகப்படுத்தல் குறைவு இதற்குக் காரணமாக பார்க்கப்படுகிறது.
ஒரு மாநிலத்தின் மொத்த பொருளாதார அளவு பெரியதாக இருந்தாலும், அந்த வருமானம் மக்கள் தொகையில் பரவிய விதமே அதன் உண்மையான நிலையை நிர்ணயிக்கிறது. அதனால் தான், வளர்ச்சி இருந்தாலும் சமமான முன்னேற்றம் இன்னும் ஒரு சவாலாகவே உள்ளது. எதிர்காலத்தில் இந்த இடைவெளி குறையுமா என்பது, வேலைவாய்ப்புகள் உருவாக்கம், தொழில்துறை முதலீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை இந்தப் பகுதிகளில் எவ்வளவு வேகமாக வளர்கின்றன என்பதையே பொறுத்தது.
Read more: புதிய ஆன்லைன் விளையாட்டு விதிகள் இன்று முதல் அமல்..! எதற்கெல்லாம் அனுமதி..! எவற்றுக்கு தடை..?



