கோடைக்காலம் வந்துவிட்டாலே வீடு முழுவதும் மாம்பழத்தின் மணம் பரவும். ஆனால், அதிக விலை கொடுத்து வாங்கிய மாம்பழங்கள் சில நாட்களிலேயே மென்மையாகி அழுகிப் போவது பலருக்கும் பெரிய வருத்தமாக இருக்கும். உண்மையில், நாம் செய்யும் சில தவறுகளே மாம்பழங்களை விரைவில் கெடச் செய்கின்றன.
மாம்பழங்கள் நீண்ட நாட்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமெனில், வாங்கும் நேரத்திலிருந்தே கவனம் தேவை. மிகவும் மென்மையாக பழுத்த பழங்களை வாங்குவதற்குப் பதிலாக, சற்றுக் கடினமாக இருக்கும் பழங்களைத் தேர்வு செய்வது நல்லது. இவை வீட்டில் மெதுவாகப் பழுத்து நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
கருப்பு புள்ளிகள் அல்லது காயம் ஏற்பட்ட மாம்பழங்களை வாங்கக் கூடாது. அவை மிக விரைவில் அழுகத் தொடங்கிவிடும். மாம்பழங்கள் இயற்கையாகவே எத்திலீன் என்ற வாயுவை வெளியிடுகின்றன. இந்த வாயு பழங்களை வேகமாகப் பழுக்கச் செய்கிறது. அதனால், நன்றாகப் பழுத்த மாம்பழங்களையும் பழுக்காத மாம்பழங்களையும் ஒன்றாக வைக்கக் கூடாது. அதேபோல், ஆப்பிள் மற்றும் வாழைப்பழங்களுடன் சேர்த்து வைத்தாலும் மாம்பழங்கள் விரைவில் கெட்டுப்போகலாம்.
சந்தையிலிருந்து வாங்கி வந்தவுடன், மாம்பழங்களை பிளாஸ்டிக் கவரில் வைத்திருக்கக் கூடாது. பிளாஸ்டிக் கவரில் வெப்பம் அதிகரித்து ஈரப்பதம் உருவாகும். இதனால் பாக்டீரியாக்கள் உருவாகி பழங்கள் விரைவில் மென்மையாகிவிடும். அதற்குப் பதிலாக, காற்றோட்டமுள்ள மூங்கில் கூடை அல்லது மரப்பெட்டியில் பழங்களை வைத்திருப்பது சிறந்தது. தரையில் காகிதம் விரித்து, அதன் மீது பழங்களை தனித்தனியாக வைப்பதும் நல்ல முறையாக கருதப்படுகிறது.
மாம்பழங்களை சேமிப்பதற்கு முன் தண்ணீரில் கழுவக் கூடாது. ஈரப்பதம் காரணமாக பூஞ்சை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். நீண்ட நாட்கள் சேமிக்க வேண்டுமெனில், ஒவ்வொரு பழத்தையும் செய்தித்தாள் அல்லது மெல்லிய காகிதத்தில் தனித்தனியாக சுற்றி வைக்கலாம். பச்சை மாம்பழங்களை உடனே குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது மிகப்பெரிய தவறு. அவை முழுமையாகப் பழுக்கும் வரை அறை வெப்பநிலையிலேயே வைத்திருக்க வேண்டும். முழுமையாகப் பழுத்த பிறகே ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும்.
குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் போதும், பழங்களை ஒன்றின் மேல் ஒன்று அடுக்காமல் காய்கறிப் பெட்டியில் இடைவெளியுடன் வைப்பது நல்லது. இதனால் மாம்பழங்கள் 5 முதல் 7 நாட்கள் வரை புத்துணர்ச்சியுடன் இருக்கும். மேலும், ஒரு நாளுக்கு ஒரு முறை மாம்பழங்களை மெதுவாகத் திருப்பி வைப்பது நல்லது. ஒரே இடத்தில் நீண்ட நேரம் இருந்தால் அந்தப் பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு பழம் விரைவில் கெட்டுப்போகும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Read more: WFH-க்கு ‘NO’ சொன்ன ஸ்ரீதர் வேம்பு.. மோடி அழைப்பைத் தொடர்ந்து Zoho எடுத்த அதிரடி முடிவு..!



