கடந்த ஆண்டு கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பான முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட பொதுநல வழக்கை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பார்டிவாலா மற்றும் கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு தமிழ்நாடு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களுக்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.
விசாரணையின் போது மனுதாரரை நோக்கி காரசாரமான கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், “அரசின் கொள்கை முடிவைக் கேள்வி கேட்க நீங்கள் யார்? ஒரு விபத்தில் குடும்பத்தின் ஒரே ஆதரவாக இருந்தவர் உயிரிழந்திருந்தால், அவரது மகன் அல்லது மகளுக்கு அரசு வேலை வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினர்.
முன்னதாக, கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்குவது, கருணை அடிப்படையில் வேலைக்காக காத்திருக்கும் மற்றவர்களின் வாய்ப்புகளைப் பாதிக்கும் என்றும், இது போன்ற கோரிக்கைகளுக்கு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்றும் கூறி, நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் அடங்கிய சென்னை உயர் நீதிமன்ற அமர்வு கடந்த ஜூலை 27 அன்று அரசின் அந்த உத்தரவை ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


