பெங்களூரு, கிட்டகனூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகப்பா. இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 11 மாத குழந்தை ஒன்றும் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த தம்பதி தங்களின் குழந்தையை ஈஸ்ட் பாயிண்ட் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மருத்துவர்களுக்கு இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், போலீசாருக்கு தகவல் தெரிவித்த மருத்துவர்கள், குழந்தையை பிரேத பரிசோதனை செய்தனர். தகவல் அறிந்த போலீசார், மருத்துவமனைக்கு விரைந்து வந்துள்ளனர். அப்போது சேகப்பா, தனது மனைவி விஜயலட்சுமி தாய்ப்பால் கொடுக்கும்போது உறங்கிவிட்டதாகவும், அப்போது குழந்தை படுக்கையிலிருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குழந்தைக்கு பல உள் காயங்கள் ஏற்பட்டு, அதிகப்படியான உள் இரத்தப்போக்கு மற்றும் சுவாசச் சிக்கல்கள் காரணமாக இறந்ததாக இருந்தது. அதுமட்டும் இல்லாமல், குழந்தையின் உடலில் முகம், மார்பு, கால்கள் மற்றும் பிறப்புறுப்புகளில் ஏற்பட்ட காயங்கள் இருப்பது அதில் கண்டறியப்பட்டது. மேலும் கட்டிலின் உயரம் சுமார் இரண்டு அடி மட்டுமே இருந்ததால் ஒருவேளை குழந்தை விழுந்திருந்தால் கூட காயங்கள் பெரிதாக ஏற்பட்டிருக்காது என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், சேகப்பா மற்றும் விஜயலட்சுமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், இருவரும் தாங்கள் குழந்தையை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், “கடந்த சில நாட்களுக்கு முன்பு, சேகப்பா மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கும் விஜயலட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ள்ளது.
சண்டையின் போது குழந்தை அழுததால் ஆத்திரமடைந்த விஜயலட்சுமி குழந்தையை உதைத்துள்ளார். மேலும், சேகப்பா ஆத்திரத்தில் குழந்தையைத் தூக்கி பலமாகத் தரையில் வீசியதில் உள்காயம் ஏற்பட்டுள்ளது. விஜயலட்சுமிக்கு பக்கத்து வீட்டுக்காருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததால், சேகப்பா தன் குழந்தையிடம் பாசமாக இருக்கவில்லை என்றும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து குழந்தையின் தந்தை சேகப்பா மற்றும் தாய் விஜயலட்சுமி இருவரையும் கொலை வழக்கின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற குழந்தையை பெற்றோரே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.



