இந்திய தேர்தல்களில் பயன்படுத்தப்படும் “அழியாத மை” (Indelible Ink) என்பது ஒரு சாதாரண அடையாளம் அல்ல.. அது நாட்டின் ஜனநாயக முறையை பாதுகாக்கும் முக்கிய பாதுகாப்பு கருவியாகும். வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் முன், அதிகாரி வாக்காளரின் இடது கையின் ஆள்காட்டி விரலில் மை பூசுவார். அந்த விரல் இல்லையெனில் மாற்று விரலில் பூசப்படும். 2006க்கு முன் நகத்தின் அருகில் மட்டும் பூசப்பட்டது. 2006க்குப் பின், நகத்திலிருந்து விரல் வரை கோடு போல் தெளிவாக பூசப்படுகிறது.
எப்படி தோன்றியது இந்த மை? இந்தியா சுதந்திரம் பெற்ற பின் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தல் (1951-52) காலத்தில், பெரும்பாலான மக்களிடம் அடையாள அட்டைகள் இல்லை. இதனால் ஒரே நபர் பலமுறை வாக்களிக்கும் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுகிறது. இதைத் தடுக்கவே வாக்காளர் விரலில் அழியாத மை பூசும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மை சாதாரண மை அல்ல. இதில் Silver Nitrate (வெள்ளி நைட்ரேட்) எனப்படும் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இது தோலில் உள்ள புரதத்துடன் சேர்ந்து ஒளி (சூரிய வெளிச்சம்) தாக்கத்தில் இரசாயன மாற்றம் அடைந்து கருமை நிறமாக மாறுகிறது. இதனால் அந்த மை உடனே கழுவி விட முடியாது. பொதுவாக 7 முதல் 10 நாட்கள் வரை அந்த மை தெளிவாக இருக்கும்.
இந்தியாவில் தேர்தலுக்கான அழியாத மை தயாரிக்கும் பொறுப்பு மைசூர் பெயின்ட்ஸ் மற்றும் வார்னிஷ் லிமிடெட் நிறுவனத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. 1962ஆம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் மட்டும் இந்த மையை தயாரித்து வருகிறது. இது கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் நிறுவனம். இந்தியாவைத் தவிர நேபாளம், ஆப்கானிஸ்தான் போன்ற சில நாடுகளுக்கும் இந்த மை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
ஏன் இன்னும் இந்த மை அவசியம்? இப்போது தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டாலும் கூட, போலி அடையாளம், இரட்டை வாக்குப்பதிவு, கள்ள ஓட்டு போன்ற முறைகேடுகளை முழுமையாகத் தடுக்க அழியாத மை இன்னும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு முறை விரலில் பூசப்பட்ட இந்த மையை சாதாரணமாக கழுவி அகற்ற முடியாது; கெமிக்கல்கள் பயன்படுத்தினாலும் முழுமையாக நீக்குவது கடினம் என்பதால், ஒருவர் மீண்டும் வாக்களிக்க முயற்சிப்பதைத் தடுக்க இது வலுவான தடையாக செயல்படுகிறது.
ஒவ்வொரு தேர்தலுக்கும் கோடிக்கணக்கான மை பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் விநியோகிக்கப்படுகின்றன. பொதுவாக ஒரு சிறிய மை பாட்டில் சுமார் 300 முதல் 500 வாக்காளர்களுக்கு பயன்படுத்தப்படுவதால், இது செலவுக்குறைவானதும், அதே நேரத்தில் மிகச் செயல்திறன் கொண்ட பாதுகாப்பு முறையாகவும் கருதப்படுகிறது.
Read more: IPL 2026: CSK ரசிகர்களே.. மும்பைக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் தோனி..? வைரலாகும் வீடியோ..



