பெங்களூரு அருகே இளம்பெண் ஒருவர் வீட்டுக்குள் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். மனைவி செல்போனில் ரீல்ஸ் வீடியோ பார்ப்பதில் அதிக நேரம் செலவிட்டதாகவும், கணவருக்கு உணவு சமைத்து கொடுக்கவில்லை என்றும், மேலும் தாம்பத்திய வாழ்க்கைக்கும் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறி ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்ததாக போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே கும்பலகோடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கேருபாளையாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் வாடகை வீட்டில் பீகாரைச் சேர்ந்த தீரஜ்குமார் (24) என்பவர் தனது மனைவி ரீமாகுமாரி (20) உடன் வசித்து வந்தார். தீரஜ்குமார் அங்குள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஜூலை 29-ம் தேதி, வீட்டுக்குள் ரீமாகுமாரி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். உடல் போர்வையால் சுற்றப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
சம்பவத்துக்குப் பிறகு தீரஜ்குமார் தலைமறைவானதால், அவரை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. இதற்கிடையே பீகாரில் பதுங்கியிருந்த தீரஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரை பெங்களூருவுக்கு அழைத்து வந்து விசாரித்தபோது, கொலைக்கான காரணம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். போலீஸ் விசாரணையின்படி, தீரஜ்குமார் ரீமாகுமாரியை காதலித்து வந்துள்ளார். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டு பெங்களூருவில் வசித்து வந்துள்ளனர்.
திருமணத்துக்குப் பிறகு இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ரீமாகுமாரி செல்போனில் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோக்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டியதாகவும், கணவருடன் அதிகமாக பேசாமல் இருந்ததாகவும் தீரஜ்குமார் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும், கணவருக்கு உணவு சமைத்து கொடுக்காமல் இருந்ததாகவும், தாம்பத்திய வாழ்க்கைக்கும் மறுப்பு தெரிவித்ததாகவும் அவர் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது.
இந்த சூழலில், கடந்த ஜூலை 27-ம் தேதி இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த தீரஜ்குமார், மனைவியிடம் உணவு கேட்டுள்ளார். அதற்கு உணவு சமைக்கவில்லை என்றும், ஓட்டலில் வாங்கி சாப்பிடுமாறும் ரீமாகுமாரி கூறியதாக தெரிகிறது. தொடர்ந்து தாம்பத்திய உறவு தொடர்பாகவும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியபோது, வீட்டில் இருந்த உருட்டுக்கட்டையால் ரீமாகுமாரி கணவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தீரஜ்குமார், துப்பட்டாவை பயன்படுத்தி ரீமாகுமாரியின் கழுத்தை இறுக்கியதுடன், பாலிதீன் பையை பயன்படுத்தி அவரது முகத்தை மூடியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் ரீமாகுமாரி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பின்னர் உடலை போர்வையால் சுற்றி வைத்துவிட்டு தீரஜ்குமார் அங்கிருந்து தப்பி பீகாருக்கு சென்றுள்ளார். சடலம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவரது கணவர் கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தீரஜ்குமார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Also Read: ஆண்களே உஷார்! அந்தரங்க புகைப்படம் எடுத்து மிரட்டி, லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் கும்பல்!



