கோயமுத்தூர் மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள காரைபாளையம் புதூரை சேர்ந்தவர் சுப்பிரமணி(54) இவருடைய மனைவி தங்கமணி அதே பகுதியில் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் மாலை சுப்பிரமணி சொந்த வேலையின் காரணமாக, வெளியே சென்று விட்டு வீடு திரும்பியிருக்கிறார். அப்போது வீட்டின் சமையலறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், தங்கமணி உயிரிழந்து கிடந்துள்ளார்.
மனைவி சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி, கூச்சலிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வந்து பார்த்துவிட்டு இந்த சம்பவம் தொடர்பாக அன்னூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து இருக்கிறார்கள் அந்த தகவலின் பெயரில் காவல்துறையினர் மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர்.
அப்போது கொலை செய்தவர்கள் தடயத்தை மறைப்பதற்காக உடலை சுற்றிலும் மிளகாய் பொடி தூவிச்சென்றது தெரிய வந்தது. அதன் பிறகு சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல்துறையைச் சார்ந்தவர்கள், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.