பஞ்சாப் மாநிலம் பட்டியாலா பகுதியில் இருக்கின்ற அர்பன் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண்மணி பர்மீந்தர் கவுர். சீக்கியரான இவர் அருகே உள்ள துக்நீர்வான் சஹிப் குருத்வாரா என்ற அவர்களுடைய மத வழிபாட்டு தளத்திற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம் என்று சொல்லப்படுகிறது.
இத்தகைய நிலையில் தான் அந்தப் பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை குருத்வாரா வளாகத்தில் உள்ள சரோவர் என்ற சொல்லப்படும் புனித நீர் இருக்கும் பகுதியில் அமர்ந்து மது அருந்தி இருக்கிறார். இதை அங்கு வழிபாட்டிற்காக வந்த மற்றொரு நபர் பார்த்து அந்த பெண்ணை கண்டித்ததாக கூறப்படுகிறது.
ஆனாலும் போதையில் இருந்த அவர் அந்த பக்தரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதற்குள் அந்த பகுதிக்கு குருத்வாரா நிர்வாகிகள் வந்து அந்த போதை பெண்மணியை மேலாளர் அறைக்கு விசாரிப்பதற்காக அழைத்துச் சென்றனர்.
மது மயக்கத்தில் இருந்த பெண் பர்மீந்தரும், வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்களும் மேலாளர் அறை அருகே நின்று கொண்டிருந்தபோது நிர்மல்ஜித்சிங் சைனி என்ற நபர் திடீரென்று தன்னுடைய துப்பாக்கியால் அந்த பெண்ணை ஆத்திரத்தில் சுட்டார். இதில் 3 குண்டுகள் அந்த பெண்ணின் மீது பாய்ந்தது.
இதில் ரத்த வெள்ளத்தின் சரிந்த அந்த பெண்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துப்பாக்கிச் சூட்டில் மற்றொரு பக்தர் மீதும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில், அவர் அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தகவல் தொடர்பாக அறிந்த காவல்துறையினர் குருத்வாராவுக்கு வந்தனர். அவர்கள் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதோடு துப்பாக்கி சூடு நடத்திய நிர்மல்ஜித்சிங் என்பவரை கைது செய்து, அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. மத வழிபாட்டு தளத்திற்கு இதுபோன்ற கொடூரமான சம்பவம் நடைபெற்றிருக்கிறது என்பது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.