இளம் கன்று பயமறியாது என்று சொல்வார்கள், அதற்கு ஏற்றார் போல தற்காலத்து இளைஞர்கள் பல ஆபத்தான விஷயங்களிலும் சர்வசாதாரணமாக ஈடுபடுவது வழக்கமாகிவிட்டது.
ஓடும் ரயிலில் இருந்து செல்பி எடுப்பது, ரயில் வரும் பாதையில் ரயிலுக்கு எதிரில் நின்று செல்பி எடுப்பது, பேருந்தில் படிக்கட்டுகளில் பயணம் செய்வது, கடலில் மிகப்பெரிய அலை வரும்போது அதன் முன்பு நின்று செல்பி எடுப்பது இப்படி பல ஆபத்தான சமயங்களில் ஆபத்தை உணராமல் அசால்டாக பல இளைஞர்கள் செயல்படுவார்கள்.ஆனால் இப்படியான விபரீதமான செயல்களில் ஈடுபடுவதன் மூலமாக பல சமயங்களில் அநியாயமாக பல உயிர்கள் பறிபோய் இருக்கின்றன.
இந்த நிலையில் தான் வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்ட மாண்டச் புயலின் காரணமாக, கடற்கரை பகுதிகளில் கடல் மிகவும் சீற்றமாக காணப்படுகின்றது. இந்த புயலின் காரணமாக, சென்னை கடற்கரை பகுதியில் சுமார் 6 முதல் 10 அடி உயரம் வரையில் அலைகள் ஆக்ரோஷமாக எழுகின்றன. இதன் காரணமாக, கடற்கரை பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று தமிழக அரசின் சார்பாக நேற்றைய தினம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் திடீரென்று இன்று கடற்கரை பகுதிகளுக்கு நடைபயிற்சிகளுக்காக கூட செல்ல வேண்டாம் என்று பொதுமக்களுக்கு தமிழக அரசு சார்பாக அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இப்படியான சூழ்நிலையில், காசிமேடு கடற்கரை பகுதியில் கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்படுகிறது. அந்தப் பகுதி இளைஞர்கள் இப்போதிருக்கும் ஆபத்தை உணர்ந்து கொள்ளாமல். கடல் பகுதிகளில் நின்று செல்பி எடுத்து வருகிறார்கள். புயல் காரணமாக, சுமார் 5 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பி ஆக்ரோஷத்தை காட்டி வருகின்றன. தடுப்புகளை தாண்டி அலைகள் விழ தொடங்கி இருக்கின்றன. கடல் நீரின் பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் கற்கள் மீது ஏறி ஆபத்தை உணர்ந்து கொள்ளாமல் காசிமேடு பகுதியைச் சார்ந்த இளைஞர்கள் பலர் செல்பி எடுத்து வருகிறார்கள்.
இளைஞர்கள் தான் அப்படி என்றால் விவரமறிந்த பெற்றோர்களும் அவர்களுடைய குழந்தைகளுடன் ஒன்றிணைந்து செல்பி எடுத்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆகவே காவல்துறையினர் இப்படி ஆபத்தை உணர்ந்து கொள்ளாமல் செல்பி எடுக்கும் நபர்களின் மீது சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.