வங்க கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயலின் காரணமாக, பெய்த கனமழையால் தமிழகத்தில் பல்வேறு விதத்தில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.அந்த பாதிப்புகளை சரி செய்வதற்கான பணிகளை மாநில அரசு தொடங்கியிருக்கிறது. என்னதான் பாதிப்புகளை சரி செய்வதாக மாநில அரசு தெரிவித்தாலும், இந்த மழையின் காரணமாக, பாதிக்கப்பட்ட காய்கறி வியாபாரிகளின் நஷ்டத்தை மாநில அரசு ஈடுகட்டுமா என்பது சந்தேகம் தான்.
அந்த வகையில் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இந்த புயலின் தாக்கம் காரணமாக, 2000 தன் காய்கறிகள் விற்பனை செய்யப்படாமல் தேக்கமடைந்திருக்கின்றன. மலிவான விலையில் விற்பனை செய்தும் அதனை பொதுமக்கள் வாங்கி செல்லாத நிலையில், வியாபாரிகள் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
கோயம்பேடு மார்க்கெட்டில் 1200க்கும் அதிகமான காய்கறி கடைகள் இருக்கின்றன, இந்த கடைகளுக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் மற்றும் தமிழகத்தை ஒட்டியுள்ள எல்லை பகுதியான ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநில பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் 5 ஆயிரம் டன் காய்கறிகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்த நிலையில், இந்த புயலின் காரணமாக, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கடந்த 2 தினங்களாக சில்லறை வியாபாரிகளின் வரத்து குறைந்து காய்கறி விற்பனையும் குறைந்திருக்கிறது.ஆகவே சந்தையில் அதிகளவில் காய்கறிகள் விற்பனை செய்யப்படாமல் தேங்கியிருக்கின்றன.
இது குறித்து கோயம்பேடு காய், கனி, மலர் சந்தை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் எம் தியாகராஜனிடம் விசாரித்தபோது 2 நாட்களில் சுமார் 2000 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்படாமல் தேக்கமடைந்து ஒட்டுமொத்த விலையில் பீன்ஸ், பாகற்காய், கத்தரிக்காய், வெண்டைக்காய், நூக்கல், முள்ளங்கி உள்ளிட்டவை கிலோ 10 ரூபாய் பீட்ரூட், தக்காளி உள்ளிட்டவை 15 ரூபாய் என்று மலிவான விலையில் விற்பனை செய்யப்பட்டும் அதனை வாங்குவதற்கு மக்கள் விரும்பவில்லை என்று தெரிவித்திருக்கிறார்