தமிழகத்தில் சிறுமி முதல் மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லாமல் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பேசிய அவர்: ஆண்டிபட்டி தொகுதிக்கு என்று தனி வரலாறு இருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா என்று அரசியல் வரலாற்றிலேயே இரண்டு முதல்வர்களை தந்த தொகுதி இது. ஆண்டிபட்டி அதிமுகவின் எஃகு கோட்டை. எத்தனை கட்சிகளுடன் திமுக கூட்டணி வைத்தாலும் வரும் தேர்தலில் வெற்றி பெற முடியாது. திமுக ஆட்சிக்கு வந்து 51 மாதம் முடிந்து விட்டது. இந்த ஆட்சியில் ஆண்டிபட்டி தொகுதிக்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.
அதிமுக ஆட்சியில் விவசாயிகளின் பங்கேற்புடன் குடிமராமத்துப் பணி, மும்முனை மின்சாரம், சொட்டு நீர் மானியம், இலவச ஆடு, மாடு, கோழி, மடிக் கணினி என்று ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினோம். அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் தொழில் வளம் பெருக நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். தமிழகம் முழுவதும் 4 ஆயிரம் மினி கிளினிக்குகள் திறக்கப்படும்.
திமுக ஆட்சியில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து விட்டது. ஆரம்பத்திலேயே இதை சட்டமன்றத்தில் கூறினேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தமிழக இளைஞர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகி சமுதாயத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. சிறுமி முதல் மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லாமல் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. காவல்துறைகளின் கைகள் கட்டப்பட்டுள்ளன.
நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இந்நிலை அனைத்தும் மாறும். பெட்ரோல் விலை குறையவில்லை. மாதம் ஒரு முறை மின் அளவீடு, கல்விக் கடன் ரத்து உள்ளிட்ட பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால் 98 சதவீதம் தேர்தல் வாகுறுதிகளை நிறைவேற்றியதாக பொய் சொல்லிக் கொண்டிருக்கின்றனர் என்றார்.