திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேருந்து நிலையம் அருகே அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆரணி சுப்பிரமணியன் நகரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற மாணவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் அதே வகுப்பில் படிக்கும் சக மாணவர் ஒருவர் கேலி செய்ததாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்ச்செல்வனுக்கும், அவரை கேலி செய்த சக மாணவருக்கும் இடையே வாய் தகராறு உண்டாகியுள்ளது. அதன் பிறகு ஒருவரை ஒருவர் கோபத்தின் உச்சத்தில் தாக்கிக் கொண்டதாக சொல்லப்படுகின்றது. இதனால் படுகாயம் அடைந்த தமிழ்ச்செல்வன் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்திருக்கிறார். இதனைக் கண்டு மற்ற மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்து உடனடியாக பள்ளி தலைமை ஆசிரியருக்கு தகவல் கொடுத்தனர்.
ஆகவே இதை கேள்விப்பட்டு விரைந்து வகுப்பறைக்கு வந்து பார்த்த தலைமை ஆசிரியர் மயங்கிய நிலையில் இருந்த தமிழ்ச்செல்வனை மீட்டு அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று அனுமதித்தார். அங்கே தமிழ்ச்செல்வனுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டதையடுத்து மேல் சிகிச்சைக்காக மாணவன் தமிழ்செல்வனை பொன்னேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர் தமிழ்ச்செல்வன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியிருக்கிறார்கள்.
இது குறித்து பள்ளி நிர்வாகம் சார்பாக பெற்றோருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், மாணவர் தமிழ்ச்செல்வன் உயிரிழப்பு தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.