மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்பு மனுக்களை தாக்கல் செய்கின்றனர்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட வைகோ, பி.வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 27-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடங்களுக்கான வேட்பு மனுத்தாக்கலுக்காக, தமிழக சட்டப்பேரவை செயலக கூடுதல் செயலர் சுப்பிரமணியன் தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், பேரவை செயலக இணை செயலர் கே.ரமேஷ் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில், எம்எல்ஏக்கள் பலம் அடிப்படையில் 6 இடங்களில் 4 திமுகவுக்கும், இரண்டு அதிமுகவுக்கும் கிடைக்கும். அதன் அடிப்படையில், திமுக சார்பில் 4 இடங்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில், தனபால் மற்றும் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புப்படி, ஜூன் 2-ம் தேதி வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது.
வரும் ஜூன் 9-ம் தேதி வரை மனுத்தாக்கல் செய்யலாம். முதல் நாளில், 2 சுயேச்சைகள் மனுத்தாக்கல் செய்தனர். அதன்பின் கடந்த இரு தினங்களாக யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், திமுக மற்றும் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் நாளை ஜூன் 6-ம் தேதி வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்.