மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற பாஜக தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மதுரை ஒத்தக்கடையில் இன்று பாஜக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா பங்கேற்றார். அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி தீவிரமாக நகர்கிறது. பஹல்காமில் மத அடிப்படையில் அப்பாவி பொதுமக்களை கொன்ற பயங்கரவாதிகள், அவர்களின் சொந்த நிலத்தில் அழிக்கப்பட்டுள்ளனர். இதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ ஒரு சாட்சியம். அது இன்னும் முடிவடையவில்லை. பயங்கரவாதத்திற்கு இந்தியா வலுவான பதிலடி கொடுக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம்” என்றார்.
திமுக அரசை குறிவைத்து அவர் கூறியதாவது: “திமுக ஆட்சியில் ஊழல் தான் செய்து வருகிறது. திமுக நூற்றுக்கு நூறு தோல்வியடைந்த ஆட்சி. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மலிந்த திமுக ஆட்சி. திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது. ஊழலால் மட்டும் அல்ல கள்ளச்சாராயத்தாலும் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். சாதி, பிரிவினைவாத அரசியல் செய்து வருகிறது திமுக.
இந்த கூட்டம் திமுக ஆட்சியின் சரிவின் தொடக்கத்தைச் சுட்டிக்காட்டுகிறது. 2026ல் தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி அமையும். ‘அமித் ஷா திமுகவை வீழ்த்த மாட்டார்’ என்று முதல்வர் கூறியிருக்கிறார். அவர் சொல்வது சரிதான்… திமுகவை வீழ்த்தப்போவது அமித் ஷா அல்ல.. தமிழ்நாட்டு மக்கள்தான்” என்றார் உறுதியாக.
Read more: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6000-ஐ கடந்தது.. 24 மணி நேரத்தில் 6 பேர் பலி..!!