மாணவர்களின் சாதியை வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் குறிப்பிடக் கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மாணவர்களின் சாதிப் பெயர்களை ரகசியமாக ஆசிரியர்கள் வைக்க வேண்டும். மாணவர்களின் சாதியை வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் குறிப்பிடக் கூடாது. ஆசிரியர்கள் மாணவர்களின் சாதி பெயரை மறைமுகமாக கூட அடைப்புக்குறிக்குள் குறிப்பிடக் கூடாது. சாதியை வெளிப்படுத்தும் வகையில் கைகளில் மாணவர்கள் பட்டைகள் அணிய தடை. சாதிய குறியீடுகளை வெளிப்படுத்தும் வகையில் சைக்கிளில் வண்ணம் அடித்து வருவதை தடை செய்ய வேண்டும், மீறினால் பெற்றோருக்கு அறிவுறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. பள்ளி மாணவர்களிடையே சாதி, சமய வேறுபாடு உணர்வுகளை தடுக்க பள்ளி கல்வித்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில்; பள்ளி மாணவர்களிடம் சாதிய மற்றும் சமூக வேறுபாடுகள் உணர்வுகள் அடிப்படையில் வன்முறைகள் உருவாகுவதைத் தவிர்ப்பதும், நல்லிணக்கம் மற்றும் நற்பண்புகளை வளர்ப்பதும் மிகவும் இன்றிமையாததது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்படுகின்றன. அதன்படி 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திருக்குறளை மையமாக கொண்டு நன்னெறி வகுப்புகள் வாரந்தோறும் நடத்தப்பட வேண்டும். இதுதவிர இலக்கியம், வினாடி வினா, நூலகம், வானவில் மன்றம் உள்ளிட்ட மன்றங்களில் மாணவர்கள் பங்கேற்க வழிசெய்ய வேண்டும். நாடகம், இசை, நடனம் உட்பட கல்விச் சாரா செயல்பாடுகளிலும் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும்.
வகுப்பறையில் மாணவர்களை 15 நாட்களுக்கு ஒருமுறை வரிசை மாற்றி அமரவைக்க வேண்டும். மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் அவர்களின் சாதி தொடர்பான விவரங்கள் இடம்பெறக்கூடாது. மாணவர்களின் சாதியை குறிப்பிட்டு ஆசிரியர்கள் அழைப்பதோ, கருத்து தெரிவிக்கவோ கூடாது. மேலும், மாணவர்களின் உதவித்தொகை குறித்த விவரங்களை வகுப்பறைகளில் அறிவிக்கக்கூடாது
அதேபோல், மாணவர்கள் தங்கள் கைகளில் வேறுபாடுகளை அடையாளப்படுத்தக்கூடிய வண்ணக் கயிறுகள், மோதிரங்கள் அணிவதற்கு தடை விதிப்பதுடன், போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட மாணவரை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க அவர்களின் பெற்றோர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும். அதனுடன். மாணவர்களுக்கு பள்ளியளவில் வழிகாட்டி ஆசிரியரை நியமிக்க வேண்டும். பள்ளிகளில் தலைமையாசிரியர், 2 ஆசிரியர்கள், 2 பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், 1 எஸ்எம்சி குழு உறுப்பினர் மற்றும் 1 பணியாளரை கொண்ட மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு அமைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.