நாளை நடைபெறவிருக்கும் கூட்டுறவு அரசுப் பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வில், ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை லஞ்சம் வசூலிப்பதாக அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல லட்சம் தமிழக இளைஞர்கள் அரசு பணிக்காக பல வருடங்கள் தங்களை அர்ப்பணித்து கடுமையாக உழைத்துக் கொண்டிருக்க திமுக அமைச்சர்கள் அரசு பணிகளை விற்பனை செய்து பணம் சம்பாதித்து கொண்டு இருக்கின்றன. ஏற்கனவே அமைச்சர் கே என் நேரு அவர்கள் துறையில் பணி நியமனத்திற்கு பணம் வாங்கியதாக புகார் எழுந்த நிலையில் நாளை நடைபெற உள்ள கூட்டுறவு அரசு பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வில் 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை வசூலிக்கப்படுவதாக செய்திகள் வருகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் என்னை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். முன்னாள் சாராய அமைச்சர் இதுபோன்ற அரசு பணி நியமனத்திற்கு பணம் வாங்கியதால் தான் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தார் என்பதையும் அமைச்சர் பதவியை இழந்தார் என்பதையும் திமுக அமைச்சர்கள் மறந்து விட்டார்களா அல்லது வந்தவரை லாபம் என்று பாரி சுருட்டலாம் என்று முடிவு செய்துள்ளார்கள் என்று எனக்கு தெரியவில்லை.
முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய அமைச்சர்கள் அரசு பணி நியமனத்திற்காக பணம் வசூலிப்பது தெரியாத அளவுக்கு பொறுப்பற்ற முதல்வராக இருக்கிறாரா அல்லது அவருக்கும் தெரிந்தது தான் இது எல்லாம் நடக்கிறதா? நாளை நடைபெற உள்ள கூட்டுறவு அரசு பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வில் நேர்மையான மற்றும் திறமையான இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். திமுக அமைச்சர் பெரிய கருப்பன் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து நேர்முகத் தேர்வு நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



