ஈரானில் திங்கள்கிழமை, ஆயிரக்கணக்கான மக்களின் கைபேசிகளில் மர்மமான எச்சரிக்கை செய்தி ஒன்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த செய்தியில், பாரசீக மொழியில் “அமெரிக்க ஜனாதிபதி அதிரடி மனிதர். காத்திருந்து பாருங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்தி தெரியாத ஒரு எண்ணிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், டொனால் டிரம்ப் ஈரான் அரசை கடுமையாக விமர்சித்து வரும் சூழலில் நிகழ்ந்துள்ளது. அதே நேரத்தில், அமெரிக்கா மத்திய கிழக்கு பகுதியில் ராணுவ கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை குவித்து வருவதால், ஈரான்மீது தாக்குதல் நடத்தப்படுமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
“குறுகிய ராணுவ தாக்குதல்” பற்றி டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஈரான்மீது “குறுகிய அளவிலான ராணுவ தாக்குதல்” நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக கூறியுள்ளார். இதனிடையே ஈரான்–அமெரிக்கா இடையேயான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வியாழக்கிழமை ஜெனீவாவில் நடைபெற உள்ளது.
தூதரக தீர்வுக்கு வாய்ப்பு: ஈரான்
ஈரானின் வெளிநாட்டு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, அமெரிக்க ஊடகமான CBS-க்கு அளித்த பேட்டியில், “இந்த அணு விவகாரத்தில் தூதரக தீர்வு கிடைக்க நல்ல வாய்ப்பு உள்ளது” என்று கூறினார். ஆனால், அமெரிக்காவின் ராணுவ அழுத்தத்திற்கு ஈரான் அடிபணியாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
லெபனானில் அமெரிக்க தூதரகம் காலி
பிராந்திய நிலவரம் மோசமாகலாம் என்ற எதிர்பார்ப்பில், அமெரிக்கா லெபனானில் உள்ள தனது தூதரகத்தில் பணியாற்றிய பல ஊழியர்களை பாதுகாப்பு காரணமாக வெளியேற்றியுள்ளது.
இதனிடையே, ஈரான் அரசு, “அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அதற்கு கடுமையான பதில் அளிக்கப்படும்” என்று எச்சரித்துள்ளது.
ஈரான், தனது அணு திட்டம் தொடர்பான ஒப்பந்த வரைவை தயாரித்து வருவதாகவும்,
அடுத்த சில நாட்களில் நடுவர்களிடம் சமர்ப்பிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் அணு திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கானது என்றும், அணு ஆயுதம் தயாரிக்கும் நோக்கம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.. ஆனால், மேற்கத்திய நாடுகள், ஈரான் அணுகுண்டு தயாரிக்க முயல்கிறது என்று சந்தேகிக்கின்றன.
மாணவர்கள் போராட்டம்
இந்நிலையில், ஈரானில் பல்கலைக்கழக மாணவர்கள் அரசுக்கு எதிராக புதிய போராட்டங்களை தொடங்கியுள்ளனர். புதிய கல்வியாண்டு தொடங்கியபோது,
முன்பு நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் எழுந்த அரசு எதிர்ப்பு கோஷங்கள் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இந்த போராட்டங்கள், கடந்த ஜனவரியில் நடந்த கடும் அடக்குமுறையை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளன.
“15 நாட்கள் அவகாசம்” – டிரம்ப்
“15 நாட்களுக்குள் ஈரான் ஒப்பந்தத்திற்கு வர வேண்டும்” என்று டிரம்ப் கூறியுள்ளார்.
அப்படி நடக்காவிட்டால், மத்திய கிழக்கில் குவிக்கப்பட்டுள்ள போர் விமானங்கள் மற்றும் கப்பல்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
பேச்சுவார்த்தை வரம்பு குறித்து முரண்பாடு,
பேச்சுவார்த்தை அணு திட்டம் குறித்து மட்டும் இருக்க வேண்டும் என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்து.. ஆனால் அமெரிக்காவோ, அணு திட்டம் மட்டுமல்ல, ஈரானின் ஏவுகணைகள் பிராந்திய ஆயுத குழுக்களுக்கு அளிக்கும் ஆதரவு பற்றியும் பேச வேண்டும் எனவும் கூறியுள்ளது..
ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள்
இந்த விவகாரத்தில், ஐரோப்பிய ஒன்றியம் தூதரக தீர்வே சிறந்த வழி என்று கூறியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு கொள்கை தலைவர் காஜா கல்லாஸ் பேசிய போது “இந்த பிராந்தியத்திற்கு இன்னொரு போர் தேவையில்லை.
இப்போது ஈரான் பலவீனமான நிலையில் உள்ளது. இந்த நேரத்தை பயன்படுத்தி,
தூதரக தீர்வை கண்டுபிடிக்க வேண்டும்” என்று கூறினார்.
Read More : 7 பேரை காவு வாங்கிய விமான ஆம்புலன்ஸ் விபத்துக்கு இதுதான் காரணமா..? அதிகாரிகள் தீவிர விசாரணை..!



