தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் நாளுக்கு நாள் அனல் பறந்து வருகிறது. அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..
அந்த வகையில் வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரும், திமுக கழக பொதுச் செயலாளருமான துரைமுருகன் கிளித்தான்பட்டறை பகுதியில் நேற்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “நான் இந்த பதவியில் இருந்த காலகட்டத்தில் யாரிடத்திலாவது ஒரே ஒரு ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கினேன்னு ஆதாரத்துடன் காட்டச் சொல்லுங்க பாப்போம். நான் இங்கேயே நெருப்புல குதிச்சு சாவறேன். ஒரு ரூபாய் கூட நான் யாருட்டையும் லஞ்சமா வாங்குனது கிடையாது.
அதே மாதிரி, நான் பெண்களிடம் தப்பா நடந்துகிட்டேனு யாராவது சொன்னா, தூக்கு போட்டு செத்துப்போவேன். ஆகையினால ஒழுக்கம் வேண்டும் ஒழுக்கம் இருக்கணும், மக்களுக்குப் பயந்து தொண்டு செய்யணும். இந்த இரண்டையும் செய்யறப்பதான் மக்கள் நம்மை வாழ்த்துவாங்க. ஆகையினால் இத்தனையும் செய்திருக்கிற எனக்கு, இந்த முறையும் நீங்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று கூறினார். காட்பாடி சட்டமன்ற தொகுதியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 11 முறையாக களம் காண்பது குறிப்பிடத்தக்கது.



