சட்டமன்றங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, பெண்களின் முன்னேற்றம் எவ்வாறு தடைபட்டுள்ளது என்பதை இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் காண்கிறார் என்று அவர் கூறினார். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்தும், நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சிகள் அரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதாவுக்கு எதிராக வாக்களித்த நிகழ்வுகள் குறித்தும் பிரதமர் மோடி பேசினார்.
“இன்று நான் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி விவாதிக்க இங்கு வந்துள்ளேன், குறிப்பாக இந்த நாட்டின் பெண்களுக்கு. பெண்களின் முன்னேற்றம் எவ்வாறு தடைபட்டுள்ளது என்பதை இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் காண்கிறார்… எங்களின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், நாங்கள் வெற்றி பெறவில்லை. பெண்கள் இட ஒதுக்கீடு திருத்தங்கள் செய்ய முடியவில்லை. இதற்காக தேசத்தின் அனைத்து தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.
“நேற்று நாடு முழுவதும் கோடிக்கணக்கான பெண்கள் நாடாளுமன்றத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். நாட்டின் பெண்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தனர். பெண்களின் நலனுக்கான இந்தத் திட்டம் தோற்கடிக்கப்பட்டபோது, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி போன்ற வம்சாவளிக் கட்சிகள் கொண்டாட்டத்தில் கைதட்டியதைக் கண்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன்,” என்று பிரதமர் மோடி கூறினார்.
நாரி சக்தி வந்தன் திருத்தம் காலத்தின் தேவை என்று கூறிய பிரதமர் மோடி, இது நாடு முழுவதும் உள்ள பெரிய, சிறிய அனைத்து மாநிலங்களையும் சமமாக வலுப்படுத்துவதையும், சமச்சீரான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டது என்றார். “ஒவ்வொரு மாநிலத்தின் குரலையும் வலுப்படுத்துவதற்கான ஒரு நேர்மையான முயற்சி இது. இருப்பினும், இந்த முயற்சி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்சிகள் தொடர்ந்து மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்த்து வருவதுடன், அதன் அமலாக்கத்தைத் தடுக்க மீண்டும் மீண்டும் தடைகளை ஏற்படுத்தி வருகின்றன.. பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவை எதிர்ப்பு தெரிவித்ததன் மூலம் அவர்கள் பாவம் செய்துவிட்டனர்.. அந்த பாவத்திற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்..,” என்று அவர் கூறினார்.
இந்த மசோதாவின் கீழ், 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, மக்களவை இடங்கள் தற்போதுள்ள 543-லிருந்து 816 ஆக அதிகரிக்கப்பட இருந்தன. மேலும், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு இடமளிக்கும் வகையில் மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்றங்களிலும் இடங்கள் அதிகரிக்கப்பட இருந்தன.
இந்த முக்கிய மசோதாவை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்பட்டது, ஆனால் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணியால் அந்த எண்ணிக்கையைத் திரட்ட முடியவில்லை.
வெள்ளிக்கிழமை இரவு மக்களவையில் மசோதா மீதான வாக்கெடுப்பின் போது, 298 உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாகவும், 230 எம்.பி.க்கள் எதிராகவும் வாக்களித்தனர். வாக்களித்த 528 உறுப்பினர்களில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற மசோதாவுக்கு 352 வாக்குகள் தேவைப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


